தமிழ்நாடு

மதுரை அண்ணாநகரைச் சுற்றியுள்ள வங்கிக் கிளைகள் மூடல்!

webteam

மதுரையில் கொரோனா வைரஸ் முலம் பாதிக்கப்பட்டு உயிரிழந்த தொழிலதிபர் வீட்டை சுற்றியுள்ள ஏழு தேசியமயமாக்கப்பட்ட வங்கிக் கிளைகளை முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக மூடுவதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

தமிழகம் முழுவதும் கொரோனா வைரஸின் தாக்கம் நாளுக்கு நாள் அதிகரித்துக் கொண்டுள்ள நிலையில் தமிழகத்திலேயே முதல் முறையாக மதுரை அண்ணாநகர் பகுதியைச் சேர்ந்த 54 வயது தொழிலதிபர் கொரோனா வைரஸால் பாதிக்கப்பட்டு உயிரிழந்தார். அதனைத்தொடர்ந்து அந்த பகுதி முழுவதும் போலீஸ் கட்டுப்பாட்டில் கொண்டு வரப்பட்டது. அந்தப் பகுதி முழுவதும் பலத்த போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டு மருத்துவ குழுக்கள் மூலம் வீடு வீடாக பரிசோதனை நடத்தப்படுகிறது.

இந்த நிலையில் மதுரை அண்ணாநகரைச் சுற்றியுள்ள ஏழு தேசியமயமாக்கப்பட்ட வங்கிகள் முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக தங்கள் வங்கிக் கிளைகளை மூடுவதாக அறிவித்துள்ளன. வங்கிகளின் கூட்டமைப்பு சார்பாக திட்டமிடப்பட்டு அதற்கான அறிக்கை மதுரை மாவட்ட ஆட்சியருக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளது. இதன்காரணமாக வருகின்ற ஏப்ரல் 14ஆம் தேதி வரை வங்கிகளை மூடுவதாகவும், அந்த பகுதியில் வாடிக்கையாளர்கள் தங்கள் சேவைகளை இணையதளம் மூலம் தொடரவும் வங்கி கூட்டமைப்பு கோரிக்கை வைத்துள்ளது.