தமிழ்நாடு

ஏசிக்குள் கையை விட்ட முதியவர்.. பதுங்கியிருந்த நல்லபாம்பு கடித்ததால் நேர்ந்த விபரீதம்

Sinekadhara

சென்னை பள்ளிகரணையில் நல்லபாம்பு கடித்து 66 வயது நபர் உயிரிழந்தார். 

சென்னை பள்ளிக்கரணை வ.ஊ.சி தெரு, சிண்டிகேட் பேங்க் காலனி பகுதியிலுள்ள தனியார் அடுக்குமாடி குடியிருப்பில் ஶ்ரீதரன்(66) என்பவர் அவரது மனைவி, மகன் மற்றும் மகளுடன் வசித்து வந்துள்ளார். ஶ்ரீதரன் வீட்டில் உள்ள ஏசியில் இருந்து இறந்துபோன எலி ஒன்று கட்டில் மேலே விழுந்துள்ளது. இதனால் ஶ்ரீதரன் அந்த ஏசியின் உள்ளே கையை விட்டு பார்த்துள்ளார். அப்போது உள்ளே நல்லபாம்பு ஒன்று இருந்துள்ளது. அதை மின்சார வயர் என்று நினைத்து, கையை வைத்து இழுத்துள்ளார். உடனே உள்ளே இருந்த நல்லபாம்பு அவரது கையைக் கொத்தியுள்ளது. பாம்பு கொத்தியதை அறிந்த வீட்டார், அவரை மீட்டு அருகிலுள்ள தனியார் மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக அழைத்துச் சென்றுள்ளனர். ஆனால் அவரை குரோம்பேட்டையில் உள்ள அரசு மருத்துவமனைக்கு எடுத்துச்செல்ல மருத்துவர்கள் அறிவுறுத்தியுள்ளனர்.

அங்கு சிகிச்சை அளிக்கப்பட்டும், சிகிச்சை பலனின்றி ஸ்ரீதரன் பரிதாபமாக உயிரிழந்துள்ளார். பின்னர் சம்பவம் குறித்து பள்ளிக்கரணை காவல் நிலையத்திற்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. தகவலறிந்து சம்பவ இடத்திற்கு வந்த பள்ளிக்கரணை போலீசார் விசாரணை மேற்கொண்டனர். பின்னர் உடலை குரோம்பபேட்டை அரசு மருத்துவமனையிலேயே பிரேத பரிசோதனைக்காக வைத்தனர். ஶ்ரீதரனை கடித்த நல்லபாம்பை தீயணைப்புத் துறையினர் பிடித்தனர்.