தமிழ்நாடு

பேருந்தில் கடத்தி வரப்பட்ட 65 நட்சத்திர ஆமைகள் பறிமுதல் 

webteam

ஆந்திராவில் இருந்து அரசு பேருந்தில் கடத்தி வரப்பட்ட 65 நட்சத்திர ஆமைகளை போதை பொருள் கடத்தல் தடுப்பு பிரிவு காவல் துறையினர் பறிமுதல் செய்தனர்.

ஆந்திராவில் இருந்து அரசு பேருந்தில் கஞ்சா கடத்தி வரப்படுவதாக காஞ்சிபுரம் சரக போதை பொருள் கடத்தல் தடுப்பு பிரிவு காவல் துறையினருக்கு ரகசிய தகவல் கிடைத்தது. இதையடுத்து தமிழக-ஆந்திர எல்லையில் திருவள்ளூர் மாவட்டத்தில் உள்ள எளாவூர் ஒருங்கிணைந்த சோதனைச் சாவடியில் போலீசார் வாகன தணிக்கையில் ஈடுபட்டிருந்தனர். அப்போது, ஆந்திர அரசு பேருந்தை சோதனையிட்ட போது, டிராவலிங் பேக் ஒன்று கிடைத்தது. அதனை சோதனையிட்ட போது, அதில் 65 நட்சத்திர ஆமைகள் இருப்பது தெரியவந்தது. 

இதைத்தொடர்ந்து அவற்றை போதை பொருள் கடத்தல் தடுப்பு பிரிவு காவல் துறையினர் பறிமுதல் செய்தனர். அவற்றை கடத்தி வந்தவர் யார்? என்பது குறித்து விசாரணை செய்து வருகின்றனர். பறிமுதல் செய்யப்பட்ட நட்சத்திர ஆமைகளை கும்மிடிப்பூண்டி வன சரக அலுவலகத்தில் அவர்கள் ஒப்படைத்தனர். ஆந்திராவில் இருந்து கடத்தி வரப்பட்ட நட்சத்திர ஆமைகள் சிங்கப்பூருக்கு கடத்தி செல்ல திட்டமிட்டிருக்கலாம் என காவல் துறையினர் தெரிவித்தனர்.