தமிழகத்தில் முதல்முறையாக 63 வயது பெண் ஒருவர் குழந்தை பெற்றிருப்பது மருத்துவத்துறையில் ஆச்சரியத்தை ஏற்படுத்தியுள்ளது.
ஆசைக்கும், ஆஸ்திக்குமாக ஒரு குழந்தை பெற்று கொஞ்சி விளையாட விருப்பப்படாத தம்பதிகள் யாரும் இல்லை. ஆனால் ஈரோடு மாவட்டம் கோபிச்செட்டிப்பாளையத்தைச் சேர்ந்த 71 வயதாகும் கிருஷ்ணா - 63 வயதான செந்தமிழ் செல்வி தம்பதிக்கு, குழந்தை இல்லை என்ற ஏக்கம் இருந்துள்ளது. இருப்பினும் மனம் தளராத அந்த தம்பதியினர், சென்னையில் செயற்கை கருத்தரிப்பு மையத்தை நாடி கடந்த 2 ஆண்டுகளாக சிகிக்சை பெற்றுள்ளனர். இந்நிலையில் இந்தத் தம்பதிக்கு அழகிய பெண் குழந்தை பிறந்துள்ளது.
மூன்றே கால் கிலோ எடையுடன் பிறந்த அந்தக் குழந்தை ஆரோக்கியமாக உள்ளதாக தெரிவித்த மருத்துவர் செந்தாமரைச்செல்வி, கருப்பை ஆரோக்கியமான நிலையில் இருந்தால் குழந்தையை பெற்றெடுப்பது சாத்தியமே என்கிறார். மாதவிடாய் நின்ற 10 ஆண்டுகளுக்குப் பிறகு அதுவும் 63 வயதில் பெண் ஒருவர் குழந்தையை பெற்றெடுத்திருப்பது தமிழகத்தில் இது முதல்முறை என்பதால் வியப்பை ஏற்படுத்தியுள்ளது.