தமிழ்நாடு

முன்னாள் அமைச்சர் ராஜேந்திர பாலாஜியை கைது செய்ய 6 தனிப்படைகள் அமைப்பு

நிவேதா ஜெகராஜா
ஆவின் உள்ளிட்ட நிறுவனங்களில் வேலை வாங்கித் தருவதாக பண மோசடி செய்ததாக முன்னாள் அமைச்சர் ராஜேந்திர பாலாஜியை கைது செய்ய 6 தனிப்படைகள் அமைக்கப்பட்டுள்ளன.
ஆவின் உள்ளிட்ட நிறுவனங்களில் வேலைவாங்கித் தருவதாக ரூ.3 கோடி பணமோசடி செய்ததாக ராஜேந்திர பாலாஜி மற்றும் அவரது ஆதரவாளர்கள் 4 பேர் மீது 5 பிரிவுகளின்கீழ் வழக்குத் தொடரப்பட்டது. விருதுநகர் மாவட்ட குற்றப்பிரிவு காவல்துறையினர் கடந்த மாதம் 18ஆம் தேதி வழக்குப்பதிவு செய்திருந்தனர். இதனைத்தொடர்ந்து முன்ஜாமீன் கோரி ராஜேந்திர பாலாஜி சென்னை உயர் நீதிமன்றத்தில் மனுத்தாக்கல் செய்திருந்தார்.
பணமோசடி தொடர்பான வழக்கில் ராஜேந்திர பாலாஜியின் முன் ஜாமீன் மனுவை நேற்று (17.12.21) விசாரித்த சென்னை உயர் நீதிமன்றம் அதனை தள்ளுபடி செய்தது. முன்ஜாமீன் மனு தள்ளுபடி செய்யப்பட்டுள்ள நிலையில், தலைமறைவாக உள்ள ராஜேந்திர பாலாஜி உள்ளிட்ட நால்வரை பிடிக்க குற்றப்பிரிவு காவல் ஆய்வாளர் கணேஷ் தாஸ் தலைமையில் 3 தனிப்படைகள் அமைக்கப்பட்டது. விருதுநகர், சாத்தூர், திருச்சி உள்ளிட்ட பகுதிகளுக்கு தனிப்படை அதிகாரிகள் தீவிர விசாரணை மேற்கொண்டு வந்த நிலையில், மேலும் 3 தனிப்படைகள் அமைக்கப்பட்டு ராஜேந்திர பாலாஜி தேடப்பட்டு வருகிறார்.
ஏற்கனவே 3 தனிப்படைகள் அமைக்கப்பட்டு அவர் தேடப்படும் நிலையில் அதன் எண்ணிக்கை 6ஆக அதிகரிக்கப்பட்டுள்ளதாக விருதுநகர் எஸ்.பி மனோகரன் தகவல் தெரிவித்திருக்கிறார். அவர் பெங்களூருவில் உள்ளார் என்று சொல்லப்படுவதால், ராஜேந்திர பாலாஜியை தேடி பெங்களூரு செல்லவும் தனிப்படை காவல்துறையினர் திட்டமிடப்பட்டுள்ளது.