தமிழ்நாடு

தருமபுரி: வனப்பகுதியில் கிடந்த 2 ஆண்களின் சடலங்கள்.. இரிடியம் மோசடியில் நிகழ்ந்த கொலை?

webteam

நல்லம்பள்ளி வனப் பகுதியில் கேரள மாநிலத்தைச் சேர்ந்த இருவர் மர்மமான முறையில் கொலை செய்யப்பட்டு கிடந்த வழக்கில், 6 பேரை காவல் துறையினர் கைது செய்தனர்.

தருமபுரி மாவட்டம் நல்லம்பள்ளி அருகே பூதனஹள்ளி வனப்பகுதியை ஒட்டியுள்ள பழைய கல்குவாரி பகுதியில் கடந்த 19ஆம் தேதி மர்மமான முறையில் இறந்த 2 ஆண் சடலங்கள் கிடந்தன. இதுகுறித்து தகவலறிந்து சம்பவ இடத்திற்கு வந்த மாவட்ட காவல் கண்காணிப்பாளர் கலைசெல்வன் மற்றும் அதியமான்கோட்டை காவல் துறையினர்  உடல்களை மீட்டு பிரேதபரிசோதனைக்கு அனுப்பி வைத்து விசாரண மேற்கொண்டனர். இந்த விசாரணையில் சடலமாக கிடந்தவர்கள் கேராள மாநிலம் திருவனந்தபுரத்தைச் சேர்ந்த சிவக்குமார் பாய், நிவில்ஜார்ஜ் குருஸ் என்பது தெரிய வந்தது.

இந்த இரட்டை கொலைவழக்கில் தருமபுரி காவல் துணை கண்காணிப்பாளர் தலைமையில் 3 தனிப்படைகள் அமைக்கப்பட்டும், செல்போன் தொடர்புகள் மற்றும் சிசிடிவி கேமரா பதிவுகளை வைத்தும், செல்போன் சிக்னல்களை கொண்டும், கொலையுண்டவர்களின் ஆதார் அட்டை உள்ளிட்டவற்றை கொண்டும் விசாரணை மேற்கொண்டு வந்தனர். முதற்கட்டமாக இரிடியம் மோசடி விவாகாரத்தில் இந்த கொலை நடந்திருக்கலாம் என தகவல் வெளியானது. மேலும் சந்தேகத்தின் பேரில் சேலம் மாவட்டத்தைச் சேர்ந்த பிரபாகரன் மற்றும் இலட்சுமணன் (எ) அபு ஆகிய இருவரிடமும் அதியமான்கோட்டை காவல்துறையினர் தீவிர விசாரணை மேற்கொண்டனர்.

இந்நிலையில், இந்த வழக்கு தொடர்பாக ஈரோட்டை சேர்ந்த ரகு, சேலம் மாவட்டத்தைச் சேர்ந்த ஜோசப், சுரேன்பாபு, விஸ்ணுவர்மன் ஆகிய 4 பேரும் நேற்று தென்காசி மாவட்டம் செங்கோட்டை உரிமையியல் நீதிமன்றத்தில் சரணடைந்தனர். இந்நிலையில், தருமபுரி மாவட்ட காவல்துறையினர் இந்த வழக்கில் தொடர்புடைய 6 பேரையும் தருமபுரி ஜேஎம் 2 நீமன்ற நீதிபதியின்முன்பு ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர். இந்த இரட்டை கொலைவழக்கில், மேலும் சிலருக்கு தொடர்பு இருப்பதால் விரைவில் அவர்களும் கைது செய்யபடுவார்கள்; மேலும் என்ன காரணத்திற்காக கொலை செய்யப்பட்டார்கள் என்பது குறித்து விசாரணை நடைபெற்று வருவதாக காவல்துறை வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.