தமிழ்நாடு

55 வயது பெண்ணுக்கு எலும்பு மூட்டு மாற்று அறுவை சிகிச்சை! - அரசு மருத்துவமனையில் சாதனை

PT

மானாமதுரை அரசு மருத்துவமனையில் 55 வயது பெண்ணுக்கு எலும்பு மூட்டு மாற்று அறுவை சிகிச்சை செய்து மருத்துவர்கள் சாதனை செய்துள்ளனர்.

சிவகங்கை மாவட்டம் மானாமதுரை அரசு மருத்துவமனைக்கு தினந்தோறும் சுமார் 800-க்கும் மேற்பட்டோர் சிகிச்சைக்காக வந்து செல்கின்றனர். சுமார் 30-க்கும் மேற்பட்டோர் உள் நோயாளிகளாக சிகிச்சை பெற்று வருகின்றனர். இந்நிலையில் ராமநாதபுரம் மாவட்டம் கமுதி தாலுகா எழுவனூர் கிராமத்தைச் சேர்ந்த ராஜேந்திரன் மனைவி புஷ்பவல்லி (55), இடுப்பு எலும்பு பகுதியில் முறிவு ஏற்பட்டு சிகிச்சைக்காக மானாமதுரை அரசு மருத்துவமனையில் சேர்க்கப்பட்டார்.

இதை எடுத்து அங்குப் பணியில் இருக்கும் எலும்பு முறிவு மருத்துவர் செந்தில்குமார், மயக்கவியல் மருத்துவர் தனலட்சுமி, தலைமை மருத்துவர் சிந்துஜா, செவிலியர் சற்குணவதி மற்றும் செவிலியர்கள் தலைமையிலான மருத்துவ குழுவினர் அப்பெண்ணிற்கு முதல்வரின் மருத்துவ காப்பீடு திட்டத்தின் கீழ் மானாமதுரை அரசு மருத்துவமனையில் எலும்பு மூட்டு மாற்று அறுவை சிகிச்சை செய்து சாதனை படைத்துள்ளனர்.

அறுவை சிகிச்சை முடிந்த அப்பெண் தற்போது முழுவதுமாக குணமடைந்து நல்ல நிலையில் நடந்து வருகிறார். இதை அடுத்து சிவகங்கை மாவட்ட மருத்துவ இணை இயக்குனர் தர்மர், அப் பெண்ணை பார்வையிட்டு பழங்கள் மற்றும் சத்து பொருட்கள் கொடுத்து வாழ்த்து தெரிவித்தார்.