தமிழ்நாடு

வீட்டின் கதவை உடைத்து 54 சவரன் நகை கொள்ளை: குற்றவாளிகளை தேடும் போலீசார்

webteam

குத்தாலம் அருகே வீட்டின் கதவை உடைத்து 54 சவரன் தங்க நகை ஒன்றரை கிலோ வெள்ளி பொருட்கள் மற்றும் ரொக்க பணம் திருட்டு குத்தாலம் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

மயிலாடுதுறை மாவட்டம் குத்தாலம் அருகே வாணாதிராஜபுரம் கிராமத்தைச் சேர்ந்த ராமகிருஷ்ணன் என்பவரின் மகன் பிரகாஷ். இவர், சென்னையில் மென்பொறியாளராக பணியாற்றி வருகிறார். இவரது மனைவி மதுமிதா பிரசவத்துக்காக அவரது தாய் வீட்டுக்கு சென்றுள்ளதால் பிரகாஷின் தந்தை ராமகிருஷ்ணன் அவ்வப்போது வந்து வீட்டை பார்த்து சென்று வந்துள்ளார். நேற்று முன்தினம் வீட்டுக்கு வந்த ராமகிருஷ்ணன் பின்னர் வீட்டை பூட்டிவிட்டுச் சென்றுள்ளார்.

இந்நிலையில் நேற்று மாலை மீண்டும் அவர் வீட்டிற்கு வந்தபோது வீட்டின் கிரில் கதவு மற்றும் முன்பக்க கதவு திறந்து இருப்பதைக் கண்டு அதிர்ச்சி அடைந்தார். இதையடுத்து உள்ளே சென்று பார்த்தபோது வீட்டின் பூஜையறை உடைக்கப்பட்டு உள்ளே மர பீரோவில் வைத்திருந்த 54 சவரன் தங்க நகைகள், 1.5 கிலோ வெள்ளி பொருட்கள் மற்றும் ரூ 21ஆயிரம் ரொக்கப் பணம் ஆகியன கொள்ளையடிக்கப்பட்டிருந்தது தெரியவந்தது.

இதையடுத்து ராமகிருஷ்ணன் குத்தாலம் காவல் நிலையத்தில் கொள்ளை சம்பவம் குறித்து புகார் தெரிவித்தார். தொடர்ந்து மயிலாடுதுறை காவல் கண்காணிப்பாளர் என்.எஸ்.நிஷா, டிஎஸ்பி வசந்தராஜ் மற்றும் குத்தாலம் போலீசார் ஆகியோர் சம்பவ இடத்துக்கு நேரில் வந்து விசாரணை நடத்தினர். மேலும் அப்பகுதியில் பொருத்தப்பட்டுள்ள சிசிடிவி பதிவுகளை கைப்பற்றி, அதன் அடிப்படையில் குற்றவாளிகளை தேடி வருகின்றனர்.

பிரதான சாலை பகுதியில் அமைந்துள்ள அந்த வீட்டில் நடைபெற்ற கொள்ளை சம்பவம் அப்பகுதி மக்கள் மத்தியில் பீதியை ஏற்படுத்தியுள்ளது.