தமிழ்நாடு

50% தொழில்நுட்ப பணியாளர்கள் பணிக்கு வர வேண்டும் - சென்னை மாநகரப் போக்குவரத்து கழகம்

webteam

சென்னை மாநகரப் போக்குவரத்து கழகத்தின் தொழில்நுட்ப பிரிவு பணியாளர்கள் 50% பேரை பணிக்கு வர உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.

இதுகுறித்து சென்னை மாநகரப் போக்குவரத்து கழகம் வெளியிட்டுள்ள அறிவிப்பில், “ மாநகரக் போக்குவரத்து கழகத்தால் இயக்கப்படும் 3584 பேருந்துகளில் அத்தியாவசிய பணிகளுக்காக இயக்கப்படும் சுமார் 300 பேருந்துகளை தவிர்த்து மற்ற அனைத்து பேருந்துகளும் கொரோனா தடுப்பு நடவடிக்கை காரணமாக பொதுமுடக்கம் செய்யப்பட்டுள்ளது.

அதனால் பணிமனைகளிலேயே நிறுத்தி வைக்கப்பட்டுள்ளது. அவ்வாறு நிறுத்தி வைக்கப்பட்டுள்ள பேருந்துகளில் 1775 பேருந்துகளில் எச்.எஃப்.சி மற்றும் எஃப்.சி ஆகியவை ஜூன் 2020க்குள்ளாக காலக்கெடு முடிவடைகின்றன.

எனவே மேற்கண்ட பேருந்துகளை புதுப்பித்து ஆய்வு செய்து தகுதி சான்றிதழ் வாங்க வேண்டி உள்ளதால் எம்.டிசி(டபுள்யூ), எஃப்சி யூனிட்கள் மற்றும் ஆர்.சி யூனிட்களில் பணிபுரியும் பணியாளர்கள் இரண்டு நாளுக்கு ஒரு முறை (50% அடிப்படையில்) உடனடியாக பணிக்கு வரும்படி அறிவுறுத்தப்படுகிறார்கள்.

மேலும், முகக்கவசம் அணிவது, கையுறை கட்டாயம் அணிவது, கைகளை அடிக்கடி சோப் போட்டு கழுவுவது, தொழிற்கூடங்கள், பணி செய்யும் இடங்கள், கேண்டீன், ஓய்வறை, நேரக்காப்பாளர் அறை உள்ளிட்ட இடங்களில் 3 அடி தனிநபர் இடைவெளியை கடைபிடிப்பது போன்ற நெறிமுறிகளை கடைபிடிக்க வேண்டும்.

பணியாளர்களுக்கு உடல்நிலை சரியில்லை என்றால் முன் அனுமதி பெற்று விடுப்பு எடுத்துக்கொள்ளவும்” எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.