செய்தியாளர்: ஆவடி நவீன் குமார்
ஆவடி கோயில்பதாகை மாடவீதி தெருவைச் சேர்ந்தவர்கள் ஆனந்தராஜன் - மோனிஷா தம்பதியர். இவர்களது மகன் பிரித்திவன் (5) ஆவடியிலுள்ள தனியார் பள்ளியில் யூகேஜி படித்து வந்தார். இந்நிலையில், நேற்று மோனிஷா தனது மகனை அழைத்துக் கொண்டு உறவினர் வீட்டிற்குச் சென்றுள்ளார். அப்போது அங்கு விளையாடிக் கொண்டிருந்த பிரித்திவன், மூடி இல்லாத 50 அடி ஆழமுள்ள உறை கிணற்றில் தவறி விழுந்துள்ளார்.
இதையடுத்து மோனிஷா, மகனை காணவில்லை என தேடிய போது கிணற்றில் விழுந்து கிடப்பதை பார்த்து அதிர்ச்சி அடைந்து அழுதுள்ளார். இவரது அழுகை சத்தம் கேட்டு ஓடி வந்த அக்கம் பக்கத்தினர் கிணற்றில் கிடந்த சிறுவனை உடனடியாக மீட்டு அருகில் உள்ள ஆவடி ராணுவ மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். அங்கு பரிசோதனை செய்த மருத்துவர்கள் பிரித்திவன் வரும் வழியில் உயிரிழந்ததாக தெரிவித்தனர்.
தகவல் அறிந்து அங்கு வந்த ஆவடி டேங்க் பேக்டரி போலீசார், சிறுவன் உடலை கைப்பற்றி உடற்கூறு சோதனைக்காக கீழ்ப்பாக்கம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். இதையடுத்து புகார் அடிப்படையில் போலீசார் வழக்குப் பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். இந்த சம்பவம் அங்கு பெரும் சோகத்தை ஏற்படுத்தியது.