தமிழ்நாடு

போதையில் மதுபாட்டிலுடன் பள்ளிக்கு சென்ற சேலம் மாணவர்கள் மீது கடும் நடவடிக்கை!

webteam

ஆத்தூர் அருகே காட்டுக்கோட்டையில் மதுபாட்டிலுடனும், போதையிலும் அரசு பள்ளிக்கு சென்ற 5 மாணவர்களை, ஒரு வாரம் சஸ்பெண்ட் செய்து மாவட்ட முதன்மை கல்வி அலுவலர் நடவடிக்கை எடுத்துள்ளார்.

சேலம் மாவட்டம் ஆத்துார் அருகே காட்டுக்கோட்டை அரசு மேல்நிலைப் பள்ளியில் ஆறு முதல் பனிரெண்டாம் வகுப்பு வரை 600 க்கும் மேற்பட்ட மாணவ, மாணவியர்கள் படித்து வருகின்றனர். இதனிடையே கடந்த 19ஆம் தேதி பதினொன்றாம் வகுப்பு படிக்கும் 5 மாணவர்கள், மது போதையில் கையில் மது பாட்டிலுடன் வகுப்பறைக்கு வந்துள்ளனர். இதைப்பார்த்து மற்ற மாணவ, மாணவியர்கள் அதிர்ச்சி அடைந்தனர்.

அவர்களின் செயலுக்காக அவர்களை கண்டித்த ஆசியர்களிடம் குடிபோதையில் இருந்த மாணவர்கள் தகராறு செய்துள்ளனர். இதனால் தலைமை ஆசிரியர் சுரேஷ், மாணவர்களின் பெற்றோருக்கு தகவல் தெரிவித்து, அவர்களை வரவழைத்து இது போன்ற செயல்களில் ஈடுபடக்கூடாது என எச்சரித்து அனுப்பி வைத்ததார்.

இந்நிலையில் மாவட்ட முதன்மை கல்வி அலுவலர் முருகன் நடந்தவற்றை விசாரித்தார். பின்னர் 5 மாணவர்களையும் ஒரு வாரம் சஸ்பெண்ட் செய்து உத்தரவிட்டுள்ளார். மாணவர்களின் இச்செயல், சக மாணவர்களிடையே அதிர்ச்சிக்குள்ளாகியுள்ளது. இதுபோன்ற சம்பவங்களை தடுக்க பள்ளி, கல்லூரிக்கு செல்லும் வழியில் செயல்பட்டு வரும் அரசு டாஸ்மாக் கடையை உடனே அகற்ற வேண்டுமென அப்பகுதி மக்கள் மற்றும் பெற்றோர்கள் அரசுக்கு கோரிக்கை விடுத்துள்ளனர்.