தமிழ்நாடு

கொடுங்கையூர் விசாரணை கைதி மரணம்: இன்ஸ்பெக்டர் உள்ளிட்ட 5 பேர் பணியிடை நீக்கம்

நிவேதா ஜெகராஜா

சென்னை கொடுங்கையூர் காவல்நிலைய விசாரணை கைதி உயிரிழந்த வழக்கு விசாரணை சிபிசிஐடிக்கு மாற்றம் செய்யப்பட்டிருந்த நிலையில் நள்ளிரவு வரை விசாரணை நடத்திய காவல் உயர் அதிகாரிகள் ஆய்வாளர், உதவி ஆய்வாளர் உள்ளிட்ட 5 பேரை பணியிடை நீக்கம் செய்தனர்.

கொடுங்கையூரில் வீடு ஒன்றில் கொள்ளையடிக்கப்பட்ட வழக்கில் திருவள்ளூர் மாவட்டம் அலமாதியைச் சேர்ந்த ராஜசேகரை காவல்துறையினர் சமீபத்தில் விசாரித்துள்ளனர். அப்போது அவர் செங்குன்றத்தில் உள்ள தனது கூட்டாளியிடம் அந்த நகைகள் இருப்பதாக கூறியதாகவும், அதன்பேரில் காவல்துறையினர் அங்கு சென்று பார்த்ததாகவும், இருந்தபோதிலும் நகைகளை மீட்கமுடியவில்லை என்றும் தெரிகிறது. இந்த நிலையில், ராஜசேகரை கொடுங்கையூர் புறக்காவல் நிலையத்தில் வைத்து நேற்று காலை விசாரணை நடத்தி உள்ளனர்.

அப்போது அவருக்கு திடீரென உடல்நிலை சரியில்லாததால் தனியார் மருத்துவமனைக்கு அவரை அழைத்துச்சென்று காவலர்கள் சிகிச்சை பெறச்செய்ததாக கூறப்படுகிறது. பின் அங்கிருந்த மருத்துவர் அறிவுறுத்தல்படி, ஸ்டான்லி அரசு மருத்துவமனைக்கு கொண்டுசென்ற நிலையில், ராஜசேகர் இறந்துவிட்டதாக அவரை பரிசோதித்த மருத்துவர் கூறியுள்ளார்.

உயிரிழந்த ராஜசேகர் மீது கொலை முயற்சி, திருட்டு உள்ளிட்ட 20க்கும் மேற்பட்ட வழக்குகள் பல்வேறு காவல்நிலையங்களில் நிலுவையில் உள்ளதாக காவல்துறையினர் தெரிவிக்கின்றனர். விசாரணை கைதி மரணம் அடைந்ததை அறிந்த சென்னை காவல்துறை வடக்கு மண்டல கூடுதல் ஆணையர் அன்பு, இணை ஆணையர் ராஜேஸ்வரி, புளியந்தோப்பு இணை ஆணையர் ஈஸ்வரன் நேரில் சென்று நள்ளிரவு வரை விசாரணை நடத்தினர்.

ராஜசேகரிடம் விசாரணை செய்த காவலர்கள் யார் யார், எங்கு வைத்து விசாரணை நடத்தப்பட்டது என்பது குறித்து விசாரித்ததாக தெரிகிறது. இதன் தொடர்ச்சியாக கொடுங்கையூர் காவல் நிலைய ஆய்வாளர் ஜார்ஜ் மில்லர் பொன்ராஜ், உதவி ஆய்வாளர் கன்னியப்பன், தலைமைக் காவலர்கள் ஜெயசேகர், மணிவண்ன், காவலர் சத்திய மூர்த்திய ஆகியோர் பணியிடை நீக்கம் செய்யப்பட்டனர். ராஜசேகரின் சந்தேக மரணம் தொடர்பான வழக்கு சிபிசிஐடிக்கு மாற்றப்பட்டுள்ளதோடு, மாஜிஸ்திரேட் விசாரணைக்கும் உத்தரவிடப்பட்டிருக்கிறது.

செய்தியாளர்: சுப்பிரமணியன்