கடலூரில் நடந்த திருமண வரவேற்பில் புதுமணத் தம்பதியினருக்கு 5 லிட்டர் பெட்ரோல் பரிசளிக்கப்பட்டது.
கடலூர் மாவட்டம் சிதம்பரம் அருகே உள்ள குமாரச்சி கிராமத்தில் இளஞ்செழியன், கனிமொழி ஆகியோருக்கு திருமணம் நடைபெற்றது. திருமணத்தையொட்டி அப்பகுதியில் உள்ள தனியார் திருமண மண்டபத்தில் அவர்களுக்கு வரவேற்பு நிகழ்ச்சி நடத்தப்பட்டது. திருமணத்திற்கு உறவினர்கள், நண்பர்கள் மற்றும் அக்கம்பக்கத்தினர் என ஏராளமானோர் வருகை தந்திருந்தனர். திருமணத்திற்கு வந்த அப்பகுதியை சேர்ந்த பிரபு மற்றும் தீபா என்ற தம்பதியினர், புதுமணத் தம்பதியினருக்கு 5 லிட்டர் பெட்ரோலை பரிசாக கொடுத்தனர்.
அப்போது மண்டபத்தில் இருந்தவர்கள் அனைவரும் உற்சாகத்துடன் கைதட்டியுள்ளனர். விலையேற்றம் குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்தும் வகையில் இந்த நூதன பரிசு வழங்கப்பட்டுள்ளது. இருப்பினும் நூற்றுக்கணக்கானோர் கூடும் சுப நிகழ்ச்சியில் பெட்ரோலால் தீ விபத்து ஏற்பட்டால், அது பெரும் அசம்பாவிதமாக அமைந்துவிடும் என்பதும் குறிப்பிடத்தக்கது.