தமிழ்நாடு

லாரி- கார் நேருக்கு நேர் மோதல்: குழந்தை உட்பட 5 பேர் உயிரிழப்பு

webteam

திருநெல்வேலியில் ஆலங்குளம் அருகே காரும் லாரியும் நேருக்கு நேர் மோதிக்கொண்ட விபத்தில் பெண் குழந்தை உட்பட 5 பேர் பரிதாபமாக உயிரிழந்தனர்.

திருநெல்வேலியில் இருந்து தென்காசி செல்லும் சாலை எப்போதும் பரபரப்பான ஒன்று. இங்கு தூத்துக்குடியில் இருந்து கொல்லம் நோக்கி லாரி ஒன்று சென்றுகொண்டிருந்தது. அதே நேரம் குற்றாலத்தில் இருந்து திருநெல்வேலி நோக்கி கார் ஒன்று வந்து கொண்டிருந்தது. காரில் 3வயது பெண் குழந்தை உட்பட 5 பேர் இருந்தனர். ஆலங்குளம் அருகே உள்ள கரும்புளியூத்து என்ற இடத்தில் வந்தபோது லாரியும் காரும் எதிர்பாராதவிதமாக நேருக்கு நேர் மோதின. 

மோதிய வேகத்தில் காரின் முன் பகுதி, லாரிக்குள் புகுந்தது. இந்த விபத்தில் காரில் இருந்த 5 பேரும் உடல் நசுங்கி பரிதாப மாக உயிரிழந்தனர். லாரி டிரைவர் தப்பியோடி விட்டார். இதையடுத்து அக்கம் பக்கத்தில் உள்ளவர்கள் கொடுத்த தகவலை அடுத்து போலீசாரும் தீயணைப்புத் துறையினரும் சம்பவ இடத்துக்கு விரைந்து வந்தனர்.

அவர்கள் காருக்குள் சிக்கி உயிரிழந்தவர்களை மீட்கும் பணியில் ஈடுபட்டனர். காரை உடைத்து உடல்களை மீட்டனர். அவர்கள் யார் என்று போலீசார் விசாரணை நடத்தி வந்தனர். 

விசாரணையில் விபத்தில் உயிரிழந்தது, திருநெல்வேலி கேடிசி நகரைச் சேர்ந்த முருகன், நிரஞ்சன்குமார், ராஜசேகர், இவரது 3 வயது மகள் தனிக்கா, மீனாட்சிபுரத்தை மகேஷ் என தெரிய வந்துள்ளது. இவர்கள் குற்றாலம் சென்றுவிட்டு திரும்பும்போது இந்த விபத்து நடந்துள்ளது.