தமிழ்நாடு

மாணவிக்கு பாலியல் தொல்லை கொடுத்த ஆசிரியர் கைது

webteam

கன்னியாகுமரியில் 4ஆம் வகுப்பு மாணவிக்கு பாலியல் தொல்லை கொடுத்த ஆசிரியர் கைது செய்யப்பட்டார்.

கன்னியாகுமரி மாவட்டம் குளச்சல் இலப்பவிளை பகுதியில் அரசு தொடக்கப்பள்ளி அமைந்துள்ளது. இந்தப் பள்ளியில் சுற்றுவட்டார பகுதியை சேர்ந்த 200க்கும் மேற்பட்ட மாணவ, மாணவிகள் பயின்று வருகின்றனர். இதில் இலப்பவிளை பகுதியை சேர்ந்த காஜா முகமது என்பவரின் மகள் 4ஆம் வகுப்பு பயின்று வருகிறார். இந்நிலையில் கடந்த வெள்ளிக்கிழமை மாணவியை தனியாக அழைத்துச்சென்ற வகுப்பாசிரியர் பொன்.ராஜதுரை, மாணவிக்கு பாலியல் தொல்லை அளித்துள்ளார். மாலை வீடு திரும்பிய மாணவி பெற்றோரிடம் நடந்ததை கூறியுள்ளார்.

இதனால் ஆத்திரமடைந்த பெற்றோர் இன்று பள்ளியை முற்றுகையிட்டு, ஆசிரியர் மீது நடவடிக்கை எடுக்கக்கோரி போராட்டத்தில் ஈடுபட்டனர். தகவலறிந்து வந்த காவல்துறையினர் ஆசிரியை கைது செய்து அழைத்துச்சென்றனர். அப்போது ஆசிரியை முற்றுகையிட முற்பட்டு, போராட்டக்காரர்கள் முழக்கங்களை எழுப்பினர். இதையடுத்து பேச்சுவார்த்தை நடத்திய காவல்துறையினர், உரிய நடவடிக்கை எடுப்பதாகக்கூறி ஆசிரியரை அழைத்துச்சென்றனர். பின்னர் போக்ஸோ சட்டத்தின் கீழ் ஆசிரியரை சிறையில் அடைத்தனர்.