தமிழ்நாடு

45-வது புத்தகக் கண்காட்சி பிப்.16-இல் தொடக்கம் - மு.க. ஸ்டாலின் தொடங்கி வைக்கிறார்

webteam

45-வது புத்தகக் கண்காட்சி வரும் பிப்ரவரி 16-ம் தேதி தொடங்கி மார்ச் 6 வரை நடைபெற உள்ளது. தொடக்க விழாவில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் கலந்து கொண்டு புத்தகக் கண்காட்சியை தொடங்கி வைக்க உள்ளார்.

கொரோனா பரவல் இருப்பதால், இந்த ஆண்டு ஆன்லைன் மூலம் டிக்கெட் விற்பனையை செய்ய உள்ளதாகவும் , bapasi.com என்கிற இணையதளத்தில் முன்பதிவு செய்து கொள்ளலாம் என்றும் தென்னிந்தியப் புத்தக விற்பனையாளர் மற்றும் பதிப்பாளர் சங்கம் சார்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

சென்னை புத்தக கண்காட்சி தொடர்பாக, தென்னிந்திய புத்தக விற்பனையாளர்கள் மற்றும் பதிப்பாளர்கள் சங்கம் சார்பில் பத்திரிகையாளர் சந்திப்பு நடைபெற்றது.

அப்போது பபாசி செயலாளர் முருகன் செய்தியாளர்களை சந்தித்தார்.

அப்போது அவர் பேசியபோது, ஜனவரியில் 1000 அரங்குகள் வரை அமைக்க திட்டமிட்டிருந்த நிலையில், தற்போது 800 அரங்குகளில், 500 பதிப்பகங்கள் மூலம் 1 லட்சம் தலைப்புகளில் புத்தகங்கள் விற்கப்பட உள்ளதாக அவர் கூறினார். அதே போல், கடந்த ஆண்டு போலவே கொரோனா வழிமுறைகளை பின்பற்றி, காலை 11 மணி முதல் 8 மணி வரை புத்தகக் கண்காட்சி நடைபெறும் என்று கூறிய அவர்கள், தமிழர்கள் பண்பாட்டை வெளிப்படுத்தும் வகையில், தொல்லியல் துறை சார்பில் 5 ஆயிரம் சதுர அடியில் கண்காட்சி நடத்தப்பட உள்ளதாகவும் அவர் தெரிவித்தார்.

அதுமட்டுமின்றி சென்னை முழுவதும் பள்ளி, கல்லூரிகளுக்கு இலவசமாக 10 லட்சம் டிக்கெட்டுகள் அளிக்கப்பட உள்ளதாகவும், குழந்தைகளுக்கு படிப்பு, எழுத்து சம்பந்தமாக அரங்கு அமைக்கப்பட உள்ளதாகவும் அவர் கூறினார்.

தொடர்ந்து பேசிய அவர், சிறந்த எழுத்தாளர்கள் 6 பேருக்கு கலைஞர் பொற்கிழி விருதினை முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தொடக்க நாளில் வழங்க உள்ளதாக தெரிவித்தார்.