தமிழ்நாடு

சென்னை: பொங்கல் பண்டிகை போக்குவரத்திற்காக இன்று 4043 சிறப்பு பேருந்துகள் இயக்கம்!

webteam

பொங்கல் பண்டிகையை கொண்டாட பொதுமக்கள் சொந்த ஊருக்கு செல்ல கடைசி நாளான இன்று, 4043 சிறப்பு பேருந்துகள் இயக்கப்பட்டு வருகிறது.

பொங்கல் பண்டிகை கொண்டாடுவதற்கு பொதுமக்கள் அவர்களது சொந்த ஊருக்கு செல்வதற்காக, 3ஆவது நாளாக சிறப்பு பேருந்துகள் இயக்கப்பட்டு வருகிறது. சென்னையில் இருந்து கோயம்பேடு, பூந்தமல்லி, தாம்பரம், மாதாவரம், கே. கே நகர் என 5 மையங்களில் பேருந்துகள் இயக்கப்பட்டு வருகிறது.

பயணிகள் வசதிக்காக மொத்தம் 12 முன்பதிவு மையங்கள் அமைக்கப்பட்டு இருக்கிறது. கோயம்பேடு பேருந்து நிலையத்தில் கூடுதலாக 3 நடைமுறைகள் அமைக்கப்பட்டு, தென் மாவட்டங்களுக்கு செல்லக்கூடிய SETC பேருந்துகள் இயக்கப்படுகிறது. இன்று மதுரை, தென் மாவட்டங்களுக்கு செல்லக்கூடிய தேனி, கம்பம், திருநெல்வேலி போன்ற இடங்களுக்கு காலை முதலே பயணிகள் செல்ல தொடங்கி இருக்கின்றனர்.

இரண்டு நாள் இயக்கப்பட்ட பேருந்துகளில் 3 லட்சத்து 74 ஆயிரம் பேர் பயணம் செய்திருப்பதாகவும், இதில் மொத்தமாக ஒரு லட்சத்து 79 ஆயிரம் பேர் முன்பதிவு செய்திருப்பதாக போக்குவரத்து துறை அதிகாரிகள் தெரிவித்தனர்.

அதேபோல் கும்பகோணம், திருவாரூர், கடலூர், மயிலாடுதுறை, திருநல்லாறு போன்ற இடஙகளுக்கு செல்ல சில மணி நேரம் காத்திருப்பதாக பயணிகள் தெரிவித்தனர். எனினும் இன்று மட்டும் 1 லட்சம் பேர் வரை வெளியூர் செல்ல வாய்ப்பு இருக்கும் என்றும், வட மாவட்டங்களுக்கு செல்லும் பேருந்துகள் இயக்க தயாராக வைத்து இருப்பதாகவும் தெரிவித்தனர்.

சி.சி.டி.வி கேமிரா மூலம் கண்காணிப்பு நடவடிக்கையும், ஒவ்வொரு நடைமேடைகளில் தனியாக விசாரணை மையம் அமைக்கப்பட்டும் இருக்கிறது என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.