தமிழ்நாடு

ஒரே நாளில் 4 இளம்பெண்கள் மாயம்: திருவள்ளூரில் பரபரப்பு!

webteam

திருவள்ளூரில் இன்று ஒரே நாளில் மட்டும் 4 பெண்கள் காணாமல் போனதாக புகார் அளிக்கப்பட்டுள்ளது.

திருவள்ளூர் மாவட்டம் கரிக்கலவாக்கம் கிராமத்தைச் சேர்ந்த பிரியதர்ஷினி (18) என்ற பெண், வேலைக்கு சென்றுவிட்டு வீடு திரும்பவில்லை. இது தொடர்பாக திருவள்ளூர் தாலுகா காவல் நிலையத்தில் புகார் அளிக்கப்பட்டுள்ளது. வெள்ளவேடு எல்லைக்குட்பட்ட ஜமீன் கொரட்டூர் பகுதியில், சித்தி வீட்டில் இருந்த சிவரஞ்சனி (16) என்ற‌ பெண் காணாமல் போயுள்ளார். இதுதொடர்பாக வெள்ளவேடு காவல்நிலையத்தில் புகார் அளிக்கப்பட்டுள்ளது. 

இதேபோன்று  புல்லரம்பாக்கம் பகுதியில் கல்லூரிக்கு செல்வதாகக் கூறி சென்ற கலைவாணி (20) என்ற பெண்ணை காணவில்லை. இதுதொடர்பாக அப்பகுதி காவல்நிலையத்தில் புகார் அளிக்கப்பட்டுள்ளது. இதுதவிர ஊத்துக்கோட்டை காவல் நிலைய எல்லைக்குட்பட்ட பகுதியில் வேலைக்கு சென்ற வர்ஷா (20) என்ற பெண் வீடு திரும்பவில்லை என பெற்றோர் புகார் அளித்துள்ளனர். ஒரே நாளில் நான்கு இளம்பெண்கள் காணமால் போன சம்பவம் திருவள்ளூரில் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. 

இதுதொடர்பாக உடனடியாக நடவடிக்கைகள் எடுக்க மாவட்ட காவல் கண்காணிப்பாளர் சிபிசக்கரவர்த்தி உத்தரவு பிறப்பித்துள்ளார். அதனடிப்படையில் காவல் நிலையங்களில் தனிப்படை அமைக்கப்பட்டு, காணாமல் போன பெண்களை தேடி வருகின்றனர்.