தமிழ்நாடு

அத்திவரதர் வைபவம் - பட்டாக்கத்தியுடன் திரிந்த 4 பேர் கைது 

webteam

அத்திவரதர் வைபவத்தில் கத்தியுடன் திரிந்த 4 பேரை போலீசார் கைது செய்துள்ளனர். 

காஞ்சிபுரத்தில், 40 ஆண்டுகளுக்கு ஒருமுறை காட்சியளிக்கும் அத்தி மரத்தாலான பெருமாளை நாள்தோறும் பல்லாயிரக்கணக்கான பக்தர்கள் நீண்ட வரிசையில் காத்திருந்து தரிசித்து வருகின்றனர். வரதராஜ பெருமாள் கோயிலில் உள்ள அனந்தசரஸ் குளத்திலிருந்து எடுக்கப்பட்ட அத்திவரதர் சிலை, பக்தர்களின் தரிசனத்திற்காக கடந்த ஒன்றாம் தேதி முதல் வசந்த மண்டபத்தில் வைக்கப்பட்டுள்ளது. சயன கோலத்தில் அத்திவரதர் 31 நாட்கள் காட்சியளித்து வந்தார். 

இன்று முதல் அடுத்த 17 நாட்களுக்கு அத்திவரதர் நின்ற கோலத்தில் காட்சியளிக்கிறார். இன்று காலை 5 மணி முதல் பக்தர்கள் மிகுந்த ஆரவாரத்துடன் நின்ற கோலத்தில் இருந்த அத்திவரதரை தரிசனம் செய்தனர். அத்துடன் இன்று முதல் மக்கள் கூட்டம் அதிகரிக்கும் என்றும் எதிர்பார்க்கப்படுகிறது. 

இந்நிலையில், தற்காலிக பேருந்து நிலையத்தில் இருந்து விஐபி வரிசையில் வரக்கூடிய பகுதியில் 4 பேர் பட்டாக்கத்தியுடன் திரிந்து கொண்டிருந்தனர். இதையடுத்து அவர்களை மடக்கி பிடித்த போலீசார் கைது செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். 

சம்பந்தபட்ட நபர்கள் நேற்று இரவு வரும் வழியில் பெட்ரோல் பங்கில் உள்ள ஊழியர்களை தாக்கி பணப்பையை பறித்திருப்பதாகவும் தற்போது அந்த நபர்களை தான் போலீசார் பிடித்துள்ளதாகவும் காவல்துறை தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.