தமிழ்நாடு

முகாமில் தங்கியிருந்த 4 பெண்கள் விபத்தில் பலி - திருவாரூரில் சோகம்

முகாமில் தங்கியிருந்த 4 பெண்கள் விபத்தில் பலி - திருவாரூரில் சோகம்

webteam

திருவாரூர் நிவாரண முகாமில் தங்கிருந்த 4 பெண்கள் சாலையை கடக்கும் போது வேன் மோதி உயிரிழந்தனர். 

கஜா புயல் தமிழகத்தை கடுமையாக தாக்கியது. இதில் லட்சக்கணக்கான மரங்கள், மின்கம்பங்கள் மற்றும் வீடுகள் சூறையாடப்பட்டன. மக்கள் வீடுகளின்றி, உணவின்றி, தங்கயிடமின்றி தவித்து வருகின்றனர். வருமானத்திற்கு வழியாக இருந்த தென்னை உள்ளிட்ட மரங்கள் வேரோடு வீழ்ந்ததால், விவசாயிகள மனமுடைந்துள்ளனர். வீடுகளை இழந்தோர் அரசு முகாம்களில் தங்க வைக்கப்பட்டுள்ளனர். அவர்களுக்கு அங்கே உணவுகள் அளிக்கப்படுகிறது.

அந்த வகையில் திருவாரூர் மாவட்டம் திருத்துறைப்பூண்டி அருகே நீர்முலைப்பகுதியில் உள்ள கால்நடை மருத்துவமனையில், நிவாரண முகாம் இயங்கிவருகிறது. இந்த முகாமில் அப்பகுதியைச்சேர்ந்த வீடிழந்த மக்கள் தங்கியுள்ளனர். முகாமில் இருந்த அமுதா, சுமதி, ராஜேஸ்வரி, சரோஜா மற்றும் மணிகண்டன் ஆகியோர் வீட்டுக்கு செல்வதற்காக நேற்று நள்ளிரவு சாலையை கடந்து சென்றுள்ளனர். அப்போது அந்த வழியாக வந்த மினி வேன் ஒன்று இவர்கள் மீது மோதியது. இதில் 4 பெண்களும் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தனர். படுகாயமயடைந்த மணிகண்டன் என்பவர் திருத்துறைப்பூண்டி அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.