தமிழ்நாடு

வயலில் உழுதுக்கொண்டிருந்தபோது தலைக்கீழாக கவிழ்ந்த டிராக்டர் - விவசாயிக்கு நேர்ந்த துயரம்

PT
அணைக்கட்டு அருகே நிலத்தில் உழுது கொண்டிருக்கும் போது டிராக்டர் கவிழ்ந்து இளம் விவசாயி ஒருவர் உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
வேலூர் மாவட்டம், அணைக்கட்டு அருகே உள்ள மலைச்சந்து கிராமத்தை சேர்ந்த விவசாயி சிலோர்மணி (எ) மணிகண்டன் (35) என்பவர் நேற்று மாலை தனது விவசாய நிலத்தில் நெல் பயிரிட தனது டிராக்டரை வைத்து உழுதுகொண்டிருந்துள்ளார். இதில் ஒரு வாய்க்காலில் இருந்து மற்றொரு வாய்க்காலுக்கு செல்ல வரப்பின் மீது டிராக்டரை ஏற்றும் போது கட்டுப்பாட்டை இழந்து டிராக்டர் தலைகீழாக கவிழ்ந்து விபத்துக்குள்ளாகியுள்ளது.  
இதில் டிராக்டரின் அடியில் சிக்கிக்கொண்ட மணிகண்டனின் அலறல் சத்தம் கேட்டதும், அங்கிருந்த அக்கம் பக்கத்தினர் விரைந்து வந்து மணிகண்டனை மீட்டு சிகிச்சைக்காக  அணைக்கட்டு அரசு மருத்துவமணைக்கு அழைத்துச் சென்றனர். அங்கு அவரை பரிசோதித்து பார்த்த மருத்துவர்கள், வரும் வழியிலேயே மணிகண்டன் உயிரிழந்துவிட்டதாக கூறியுள்ளனர்.
இதனையடுத்து தகவலறிந்து வந்த அணைக்கட்டு காவல் துறையினர் மணிகண்டனின் உடலை கைப்பற்றி பிரேதப் பரிசோதனைக்காக வேலூர் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். மேலும் இவ்விபத்து குறித்து வழக்கு பதிவு விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். இந்நிலையில், அவர் உயிரிழந்தது அப்பகுதி மக்களை சோகத்தில் ஆழ்த்தியுள்ளது.