சித்ரா பௌர்ணமி கிரிவலம் pt
தமிழ்நாடு

சித்ரா பௌர்ணமி| கிரிவலப்பாதையில் குவிந்த 300 டன் குப்பைகள்!

சித்திரை பௌர்ணமியை முன்னிட்டு திருவண்ணாமலை கிரிவம் செல்ல லட்சக்கணக்கான பக்தர்கள் திரண்டதில் 300 டன் குப்பைகள் சேர்ந்தது.

Rishan Vengai

திருவண்ணாமலையில் சித்ரா பௌர்ணமி கிரிவலத்துக்கு லட்சக்கணக்கான பக்தர்கள் திரண்டதால், 14 கிமீ கிரிவலப்பாதை முழுவதும் 300 டன் குப்பைகள் குவிந்தன. இதில் 80 டன் காலணிகள் மட்டும் அகற்றப்பட்டன. 2 ஆயிரத்துக்கும் மேற்பட்ட தூய்மைப் பணியாளர்கள் இரவு பகலாக உழைத்து பாதையை சுத்தம் செய்ததற்கு, மாவட்ட ஆட்சியர் தர்பகராஜ் நேரில் சென்று பாராட்டு தெரிவித்தார்.

உலக பிரசித்தி பெற்றது திருவண்ணாமலையில் அண்ணாமலையார் கோவில். இங்குதான் சிவபெருமான் மலையாகவே இருக்கிறார் என்ற நம்பிக்கை இருப்பதால் ஒவ்வொரு பௌர்ணமியின் போதும் பக்தர்கள் மலையைச் சுற்றி கிரிவலம் சென்று சிவனை வழிபடுகிறார்கள்.

திருவண்ணாமலை கோவில்

அதிலும் குறிப்பாக சித்திரை பௌர்ணமியின் போது கிரிவலம் சென்றால், வருடம் முழுவதும் வரும் 12 பெளர்ணமிகளிலும் விரதம் இருந்து கிரிவலம் சென்றால் என்ன பலன் கிடைக்குமோ ஒரே நாளில் அது கிடைக்கும் என்ற நம்பிக்கை உள்ளது. அதனால் சித்ரா பௌர்ணமியின் போது கிரிவலம் வரும் பக்தர்களின் எண்ணிக்கை எப்போதும் விட அதிகமாகவே இருக்கும். 14 கிமீ கிரிவலம் செல்லும் பக்தர்கள் 8 திசைகளை காட்டும் 8 அஷ்ட லிங்கங்களை வழிபட்டு பலன்பெறுகிறார்கள்.

இந்தசூழலில் மே 1ஆம் தேதி சித்ரா பௌர்ணமியை ஒட்டி கிரிவலம் செல்ல லட்சக்கணக்கான பக்தர்கள் குவிந்தனர்.

இந்தநிலையில் திருவண்ணாமலையில் சித்ரா பௌர்ணமியின் கிரிவலத்தின் போது பக்தர்கள் விட்டுச் சென்ற 300 டன் குப்பைகளை தூய்மைப் பணியாளர்கள் அகற்றினர்.

கிரிவலப் பாதையை சுத்தம் செய்த போது 80 டன் காலணி உள்பட 300 டன் குப்பைகள் அகற்றப்பட்டன. இப்பணியில் ஈடுபட்ட 2 ஆயிரத்திற்கும் மேற்பட்ட தூய்மைப் பணியாளர்களை, மாவட்ட ஆட்சியர் தர்பகராஜ் நேரில்சந்தித்து பாராட்டினார்.