ஃபெஞ்சல் புயல் காரணமாக விழுப்புரம் மாவட்டத்தில் கனமழை கொட்டித் தீர்த்தது. இன்று விழுப்புரம், கடலூர், உள்ளிட்ட 5 மாவட்டங்களில் அதி கனமழை பெய்யும் என ரெட் அலர்ட் விடுக்கப்பட்டுள்ளது. இந்நிலையில், விழுப்புரம் மாவட்டம் முண்டியம்பாக்கம் அருகே ஆபத்தான முறையில் ரயில் பாதையை கடந்து மழைநீர் செல்வதாகக் கூறி, முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக இரு ரயில்கள் நிறுத்தி வைக்கப்பட்டுள்ளன.
கடலூர் மாவட்டம் விருத்தாசலம் ரயில்வே சந்திப்பின் வழியாக கன்னியாகுமரியில் இருந்து சென்னைக்குச் செல்லும் கன்னியாகுமரி எக்ஸ்பிரஸ், மற்றும் திருநெல்வேலியில் இருந்து சென்னைக்குச் செல்லும் நெல்லை எக்ஸ்பிரஸ் ஆகிய இரு ரயில்களும் கடந்த இரண்டு மணி நேரமாக விருத்தாசலம் ரயில்வே சந்திப்பில் நிறுத்தி வைக்கப்பட்டுள்ளது.
அதேபோல், ராமேஸ்வரத்தில் இருந்து சென்னை செல்லும் சேது எக்ஸ்பிரஸ் நிறுத்தி வைக்கப்பட்டுள்ளது. விக்கிரவாண்டி மற்றும் முண்டியம்பாக்கம் இடையே இடைநிறுத்தப்பட்டதாலும் தண்ணீர் அபாய அளவைத் தாண்டி உயர்ந்ததாலும், சென்னை எழும்பூர் நாகர்கோயில் வந்தே பாரத் எக்ஸ்பிரஸ், சென்னை எழும்பூர் மதுரை தேஜஸ் எக்ஸ்பிரஸ், சென்னை எழும்பூர் புதுச்சேரி இடையேயான ரயில் என 3 எக்ஸ்பிரஸ் ரயில்கள் முழுமையாக ரத்து செய்யப்பட்டுள்ளன.