சென்னை ராயலாநகரில் குடும்ப பிரச்சனையால் ஒரே குடும்பத்தை சேர்ந்த 3 பேர் தற்கொலை செய்து கொண்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
சென்னை ராயலாநகரில் வாடகை வீட்டில் வசித்து வருபவர் செந்தாமரை. சென்னை அண்ணா நகரில் உள்ள செல்போன் கடையில் வேலை செய்து வருகிறார். செந்தாமரைக்கும் அபிதா(28) என்பவருக்கும் கடந்த 12 ஆண்டுகளுக்கு முன் திருமணமாகி லக்ஷ்மி நாராயணன்(12) என்ற ஒரு மகனும் மகாலட்சுமி (7) என்ற மகளும் உள்ளனர்.
இந்த நிலையில் நேற்று காலை பணிக்கு சென்ற செந்தாமரை இரவு வீட்டிற்கு சென்றுள்ளார். வீட்டின் உள்ளே சென்று பார்த்தபோது தன் மனைவி மற்றும் பிள்ளைகள் தூக்கில் தொங்கி கொண்டு இருந்தை கண்டு அதிர்ச்சி அடைந்ததோடு வெடித்து அழுதார். சம்பவம் குறித்து உடனடியாக ராயலாநகர் காவல் நிலையத்திற்கு தகவல் அளிக்கப்பட்டது.
பின்னர் மூன்று சடலங்களையும் கைப்பற்றிய காவல் துறையினர் பிரேத பரிசோதனைக்காக ராயப்பேட்டை மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். அதேபோல் வீட்டில் அபிதா எழுதிய கடிதத்தை பறிமுதல் செய்தனர். அதில் எனது சாவிற்கு யாரும் காரணமில்லை என்றும் தனது கணவர் தங்களை சரியாக கவனித்து கொள்ளவில்லை. இறந்த பிறகு தான் தங்களின் அருமை புரியும் என்றும் எழுதியுள்ளார். முதல்கட்ட விசாரணையில் கணவருடன் ஏற்பட்ட மன வேதனையில் தன் இரண்டு பிள்ளைகளையும் தூக்கிட்டு கொலை செய்துவிட்டு தாமும் தற்கொலை செய்து கொண்டது தெரிய வந்தது. இந்த சம்பவம் அப்பகுதியில் சோகத்துடன் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.