தமிழ்நாடு

மக்கள் நடமாட்டம் நிறைந்த பகுதியில் மூவர் கொலை - சிசிடிவி கேமராக்கள் ஆய்வு

webteam

திருவள்ளூரில் ரவுடிகள் உள்ளிட்ட மூவர் வெட்டி கொல்லப்பட்ட சம்‌பவம் பரபரப்பை ஏற்‌படுத்தியுள்ளது.

திருவள்ளூர் மாவட்டம் கும்மிடிப்பூண்டி ரயில் நிலையம் அருகே பேசிக்கொண்டிருந்த இளைஞர்களுக்கும், மற்றொரு கும்பலுக்கும் இடையே வாக்குவாதம் ஏற்பட்டுள்ளது. அப்போது உருவான மோதலில் 8 பேர் கொண்ட கும்பல் நடத்திய தாக்குதலில், தண்டையார்பேட்டை‌யைச் சேர்ந்த சதீஷ், வியாசர்பாடியைச் சேர்ந்த விமல் ஆகியோர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தனர். தப்பிக்க முயன்ற கல்லூரி மாணவர் ஆகாஷ் என்பவரையும் விரட்டிச் சென்ற அந்த கும்பல், வெட்டிக் கொன்றுவிட்டு தப்பிச் சென்றது. 

மக்கள் நடமாட்டம் மிகுந்த ரயில் நிலையம் அருகே நடந்த இக்கொலை சம்பவம், அப்பகுதியில் அதிர்ச்சியை ஏற்படுத்தியது. தகவலறிந்து காஞ்சிபுரம் சரக டிஐஜி தேன்மொழி உள்ளிட்ட உயரதிகாரிகள், சம்பவ இடத்தில் விசாரணை மேற்கொண்டனர். இதுதொடர்பாக 5 தனிப்படைகளை அமைத்துள்ள காவல்துறையினர், அப்பகுதியில் உள்ள சிசிடிவி கேமரா காட்சிகளை ஆய்வு செய்து வருகின்றனர்.

கொல்லப்பட்ட சதிஷ், விமல் ஆகியோர் மீது கொலை வழக்குகள் நிலுவையில் இருப்பதாக காவல்துறையினர் தெரிவித்துள்ளனர். முன்விரோதத்தால் இச்சம்பவம் நடந்திருக்கலாமா என்ற கோணத்தில் காவலர்கள் விசாரித்து வருகின்றனர்.