தமிழ்நாடு

ஈரோடு: மனநல குறைபாடுள்ள 3 பிள்ளைகளுடன் தனி ஆளாக போராடும் தாய்

rabiyas

ஈரோடு மாவட்டம் மொடக்குறிச்சியில் 3 மனநலம் குறையுள்ள பிள்ளைகளை தனி ஆளாக வயதான தாய் ஒருவர் பராமரித்து வரும் சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

ஈரோடு மாவட்டம் மொடக்குறிச்சியை சேர்ந்தவர் குப்புசாமி-பருவதம் தம்பதி. இவர்களுக்கு 2 ஆண் குழந்தைகள், 2 பெண் குழந்தைகள். இதில் 3 பேர் மனநலம் குறையுள்ளவர்கள். குப்புசாமி டெய்லர் தொழில் செய்து குடும்பத்தை நடத்தி வந்துள்ளார்.  தனது மனநலம் குறையுள்ள 3 குழந்தைகளுக்கு சிகிச்சை அளித்து குணப்படுத்திவிடலாம் என எண்ணி பல்வேறு மருத்துவர்களை நாடியுள்ளனர். ஆனால் எந்த முயற்சியும் பயனளிக்கவில்லை. தினம் தினம் தனது குழந்தைகளின் நிலையை எண்ணி கவலையில் இருந்த குப்புசாமி கடந்த 10 ஆண்டுகளுக்கு முன் உயிரிழந்துள்ளார். கணவனை இழந்த நிலையில் பருவதம் தனது தாயின் உதவியுடன் குழந்தைகளை பராமரித்து வந்துள்ளார்.

ஆனால் மேலும் ஒரு பேரடியாக பருவதத்தின் தாயும் 5 ஆண்டுகளுக்கு முன் உயிரிழந்துவிட்டார். கணவன் மற்றும் தாயை இழந்த நிலையில், அரசு வழங்கும் முதியோர் மற்றும் மாற்றுத்திறனாளி உதவித்தொகையை கொண்டு குழந்தைகளை கவனித்து வந்துள்ளார். இவர் சேதமடைந்த கூரையின் கீழ் தனது குழந்தைகளுடன் அவதிப்படுவதை அறிந்த அரசு அலுவலர்கள், எம்எல்ஏ சரஸ்வதி மற்றும் பலர் உதவி செய்து, புதிய வீட்டிற்குள் குடியமர்த்தியுள்ளனர். ஆனால் பராமரிப்பு மற்றும் குடும்ப செலவிற்கு போதிய அளவில் பணம் இல்லாமல் சிரமப்பட்டு வருகிறார்.

எலும்பும் ஒட்டிய தோலுடன் சிறிய உருவம் கொண்ட இந்த குழந்தைகளின் வயது 36. வயது முதிர்ந்தாலும் தாய்க்கு தன் குழந்தை எப்போதும் குழந்தையே என்பதுபோல, தற்போதும் குழந்தையை போலவே உணவு ஊட்டிவிட்டு பேசமுடியாத குழந்தையுடன் பேசி வருகிறார் பருவதம். தனி ஆளாக போராடி வரும் பருவதம் தனது குழந்தைகளுக்கு ஏற்பட்ட பாதிப்பை உயர்தர சிகிச்சை மூலம் சரி செய்ய அரசு உதவி செய்ய வேண்டும், தனக்கு பின் தனது குழந்தைகளின் எதிர்காலத்தை அரசு ஏற்றுக் கொள்ள வேண்டும் என கோரிக்கை விடுத்துள்ளார்.

இதையும் படிக்கலாமே> சசிகலா பயணம் செல்வதை வரவேற்கிறேன்; அது அவசியமான ஒன்று - சீமான்