தமிழ்நாடு

நாமக்கல் காவல் நிலையத்தில் அடுத்தடுத்து தஞ்சமடைந்த 3 காதல் ஜோடிகள்! பின்னணி இதுதான்!

webteam

நாமக்கல் அனைத்து மகளிர் காவல் நிலையத்தில் பாதுகாப்பு கேட்டு அடுத்தடுத்து 3 காதல் ஜோடிகள் தஞ்சம் புகுந்ததால் பரபரப்பு ஏற்பட்டது. 

கார்த்திகை மாதத்தின் கடைசி சுப முகூர்த்த தினமான இன்று நாமக்கல் அனைத்து மகளிர் காவல் நிலையத்திற்கு திருமணம் செய்த 3 காதல் ஜோடிகள் தங்களுக்கு பாதுகாப்பு வேண்டி தஞ்சமடைந்தனர். நாமக்கல் மாவட்டத்தை சேர்ந்த 2 காதல் ஜோடிகளும், திருப்பூர் மாவட்டத்தில் வசித்து வரும் ஒரு காதல் ஜோடியும் இன்று காலை திருமணம் செய்து கொண்டு தங்களுக்கு உறவினர்கள் மூலம் மிரட்டல் வருவதாகவும், எனவே தங்களுக்கு பாதுகாப்பு வழங்கிட வேண்டும் எனவும் கோரி நாமக்கல் அனைத்து மகளிர் காவல் நிலையத்தில் மனு அளித்தனர்.

அந்த மனுக்களை விசாரணை செய்த மகளிர் காவல் நிலைய ஆய்வாளர் பூர்ணிமா, இரு தரப்பு பெற்றோரையும் அழைத்துப் பேசி மணமகளின் விருப்பப்படி அப்பெண்களை அனுப்பி வைத்தனர். 3 ஜோடிகளில் இரண்டு ஜோடி ஒரே வகுப்பை சேர்ந்தவர் என்பதால் எந்தவித பிரச்சனையும் இல்லாமல் பெற்றோர்களும், உறவினர்களும் சென்ற நிலையில், திருப்பூரைச் சேர்ந்த காதல் ஜோடியினர் மாற்று வகுப்பைச் சேர்ந்தவர்கள் என்பதால் பெற்றோரை நேரில் வர அழைத்துள்ளதாகவும், அவர்களிடமும் பேசி பெண்ணின் விருப்பப்படி அனுப்பி வைக்கப்படும் எனவும் ஆய்வாளர் தெரிவித்தார்.

ஒரே நாளில் 3 காதல் ஜோடி பாதுகாப்பு கேட்டு காவல் நிலையத்தில் தஞ்சம் அடைந்தது, காவல் நிலையமே சுப நிகழ்ச்சி நடைபெறும் இடம்போல் காட்சி அளித்தது.