Death
Death File Photo
தமிழ்நாடு

செங்கல்பட்டு: கேஸ் கசிவால் பரவிய தீ – 3 குழந்தைகள் உயிரிழப்பு

webteam

செய்தியாளர்: உதயகுமார்

செங்கல்பட்டு நகராட்சிக்குட்பட்ட பெரிய மணியக்கார தெருவில் வசிப்பவர் வட மாநிலத்தைச் சேர்ந்த சதாம் (30). இவர் கடந்த 6 வருடங்களாக செங்கல்பட்டு ரயில் நிலையத்தில் தேனீர் வியாபாரம் செய்து வருகிறார். இந்நிலையில், நேற்று சதாம், செங்கல்பட்டு ரயில் நிலையத்தில் டீ வியாபாரம் செய்யச் சென்ற நிலையில், அவரது வீட்டில் சதாமின் மனைவி மற்றும் மூன்று பிள்ளைகளும் இருந்துள்ளனர்.

Gas Cylinder

இந்நிலையில், நேற்றிவு உணவு தயார் செய்வதற்காக சதாமின் மனைவி கேஸ் அடுப்பை பற்றவைக்க முயன்றுள்ளார். அப்போது திடீரென வீடு முழுவதும் தீ பரவியுள்ளது. இதில் சதாமின் மனைவி மற்றும் அவரது பிள்ளைகளான பர்வீன் (8), சயலி (4), ஆல்தா(1) ஆகிய 4 பேர் மீதும் தீப்பற்றியுள்ளது. இதனைக்கண்ட அக்கம்பக்கத்தினர் தீயில் சிக்கியவர்களை போராடி மீட்டனர். இருப்பினும் 4 பேரும் தீயில் சிக்கி பலத்த காயமடைந்தனர்.

தகவல் அறிந்து சம்பவ இடத்திற்கு வந்த செங்கல்பட்டு நகர காவல்துறையினர் மற்றும் தீயணைப்புத் துறையினரும் தீ விபத்தில் சிக்கி உயிருக்குப் போராடியவர்களை மீட்டு சிகிச்சைக்காக செங்கல்பட்டு அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.

இதையடுத்து மேல் சிகிச்சைக்காக சென்னை கீழ்ப்பாக்கம் அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வந்தனர். இந்நிலையில் சிகிச்சை பலனின்றி 3 குழந்தைகளும் உயிரிழந்தனர். இச்சம்பவம் குறித்து செங்கல்பட்டு நகர போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.