செய்தியாளர்: இமானுவேல்
திருப்பத்தூர் மாவட்டம் வாணியம்பாடி அடுத்த சங்கராபுரம் பகுதியில், அரசு ஊராட்சி ஒன்றிய துவக்கப் பள்ளி உள்ளது. கடந்த 2023 - 2024 ஆம் நிதியாண்டில் ஊரக வளர்ச்சி மற்றும் உள்ளாட்சித் துறை சார்பில் வாணியம்பாடி அதிமுக சட்டமன்ற உறுப்பினர் செந்தில்குமார் வழங்கிய ரூ.21 லட்சம் மதிப்பில் இரண்டு புதிய வகுப்பறைகள் கட்டப்பட்டன. இதையடுத்து இந்த புதிய கட்டடம் கடந்த 2024 ஆம் ஆண்டு ஆகஸ்ட் மாத இறுதியில் திறக்கப்பட்டது.
இந்நிலையில், இந்த வகுப்பறையில், 1 ஆம் வகுப்பு முதல் 5 ஆம் வகுப்பு வரை 33 மாணவர்கள் பயின்று வருகின்றனர். இன்று வகுப்பறையில் மாணவர்கள் பாடம் பயின்றுக் கொண்டிருந்த போது வகுப்பறையின், மேல்கூரை பூச்சு திடீரென பெயர்ந்து மாணவர்களின் தலையில் விழுந்துள்ளது. இதில், 1ஆம் வகுப்பு மாணவன் பிரனீத், 3 ஆம் வகுப்பு சுதர்சன் மற்றும் விஷேக் ஆகியோர் படுகாயமடைந்தனர்.
இதையடுத்து உடனடியாக ஆசிரியர்கள் மற்றும் அப்பகுதி மக்கள் மாணவர்களை மீட்டு சிகிச்சைக்காக வாணியம்பாடியில் உள்ள தனியார் மருத்துவமனையில் அனுமதித்துள்ளனர். இதைத் தொடர்ந்து விபத்து ஏற்பட்ட பள்ளியில் வாணியம்பாடி துணை காவல் கண்காணிப்பாளர் விஜயகுமார் தலைமையிலான காவல்துறையினர் மற்றும் வருவாய்த் துறையினர் நேரில் விசாரணை மேற்கொண்டனர்.
இதையடுத்து நாட்றம்பள்ளி வட்டார கல்வி அலுவலர் சரவணன் ஆய்வு செய்த நிலையில், பள்ளி தற்போது விடுமுறை விடப்பட்டுள்ளது. இந்தக் கட்டடத்தை மாணவர்கள் மற்றும் ஆசிரியர்கள் பயன்படுத்தக் கூடாது என உத்தரவு பிறப்பித்துள்ளார். இந்த சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது..