தமிழ்நாடு

தாயின் கண் முன்னே 3 பெண் குழந்தைகள் கிணற்றில் மூழ்கி உயிரிழப்பு

தாயின் கண் முன்னே 3 பெண் குழந்தைகள் கிணற்றில் மூழ்கி உயிரிழப்பு

webteam

தாயின் கண்முன்னே 3 பெண் குழந்தைகள் கிணற்றில் தவறி விழுந்து உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

கிருஷ்ணகிரியை சேர்ந்தவர் மணிகண்டன். இவர் பெங்களூருவில் உள்ள பெட்ரோல் பங்க் ஒன்றில் பணியாற்றி வருகிறார். இவரது உறவினரான திட்டக்குடி அருகே மலையனூர் கிராமத்தை சேர்ந்த மரியபிரகாஷ் என்பவரது மகனின் பிறந்த நாள் நிகழ்ச்சிக்கு, தனது மனைவி மற்றும் மூன்று மகள்களையும் மணிகண்டன் அனுப்பி வைத்துள்ளார்.

இதைத்தொடர்ந்து நேற்று மதியம் அதே பகுதியில் உள்ள திருநாவுக்கரசு என்பவருக்கு சொந்தமான விவசாய கிணற்றில் குளிப்பதற்கு தனது மூன்று மகள்களையும் மணிகண்டனின் மனைவி அழைத்துச் சென்றுள்ளார். அப்போது அங்கு தாய் துணி துவைத்துக் கொண்டிருந்தபோது சுவேதா(14), நிவேதா (11), சுஜாதா (8) ஆகிய மூன்று குழந்தைகளும் ஒன்றன்பின் ஒன்றாக கிணற்றில் தவறி விழுந்து மூழ்கியுள்ளனர்.

இதனை பார்த்த அதிர்ச்சி அடைந்த குழந்தைகளின் தாய் ஸ்டெல்லாவின் அலறல் சத்தம் கேட்டு அப்பகுதியில் இருந்தவர்கள் கிணற்றில் குதித்து குழந்தைகளை காப்பாற்ற முயன்றனர். ஆனால் நீச்சல் தெரியாத மூன்று குழந்தைகளும் நீரில் மூழ்கி பரிதாபமாக உயிரிழந்தனர்.

தகவலறிந்து சம்பவ இடத்திற்கு வந்த சிறுபாக்கம் போலீசார் மற்றும் திட்டக்குடி காவல்துறை கண்காணிப்பாளர் வெங்கடேசன் உடல்களை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். பெற்ற தாயின் கண்முன்னே மூன்று குழந்தைகளும் இறந்தது அப்பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.