தமிழ்நாடு

குழிக்குள் இறங்கி குழந்தையை மீட்கப் போகும் 3 வீரர்கள்!

webteam

ரிக் இயந்திரம் கொண்டு தோண்டப்படும் குழிக்குள் 3 தீயணைப்பு வீரர்கள் இறங்கி, குழந்தை சுர்ஜித்தை மீட்க உள்ளனர்.

திருச்சி மாவட்டம் மணப்பாறை அருகே நடுக்காட்டுப்பட்டியில் உள்ள வீட்டின் தோட்டத்தில் விளையாடிக்கொண்டிருந்த 2 வயது குழந்தை சுர்ஜித் ஆழ்துளை கிணற்றுக்குள் தவறி விழுந்தான். தற்போது 100 அடி ஆழத்தில் சிக்கியுள்ள குழந்தையை மீட்கும் பணி 37 மணி நேரத்திற்கும் மேலாக நடைபெற்று வருகிறது.  பலகட்ட முயற்சிகள் தோல்வியடைந்த நிலையில் தற்போது குழந்தையை மீட்க புதிய முயற்சி மேற்கொள்ளப்பட உள்ளது.  அதாவது ஆழ்துளை கிணறு அருகே சுரங்கம்போல மற்றொரு குழி தோண்டப்பட்டு குழந்தையை மீட்க நடவடிக்கை எடுக்கப்படுகிறது. இதற்காக ஓஎன்ஜிசியின் ரிக் இயந்திரம் வரவழைக்கப்பட்டுள்ளது. 

ஆழ்துளை கிணறுக்கு அருகில் 2 மீட்டர் தொலைவில் 1 மீட்டர் அகலம், 110 அடி ஆழத்தில் இந்தக்குழி தோண்டப்படும். குழி தோண்டும் பணிக்காக ரிக் இயந்திரம், மீட்புப் பணி நடைபெறும் இடத்திற்கு வந்தது. இந்த இயந்திரத்தை ஒருங்கிணைத்து நிலைநிறுத்தும் பணி நடைபெற்றது. அது முடிவடைந்த நிலையில் குழி தோண்டும் பணியை இயந்திரம் தொடங்கியுள்ளது. இந்த பணி ஒன்றரை மணி நேரத்தில் நிறைவடையும் எனக் கூறப்படுகிறது.

பின்னர் கண்ணதாசன், திலீப்குமார், மணிகண்டன் ஆகிய மூன்று தீயணைப்பு வீரர்கள் குழிக்குள் இறங்க உள்ளனர். ஆக்சிஜன் குழாய்களுடன் இறங்கும் இவர்கள், பக்கவாட்டில் குழி தோண்டி, குழந்தை சுர்ஜித்தை மீட்பார்கள். அதற்கானத் தகுந்த ஆலோசனைகள் அவர்களுக்கு வழங்கப்பட்டுள்ளது.