பிரதமர் நரேந்திர மோடி தமிழகம் வந்த நிலையில், முதல்வர் மு.க.ஸ்டாலின் மற்றும் எதிர்க்கட்சித் தலைவர் எடப்பாடி பழனிசாமி ஆகியோர் தனித்தனியாக கோரிக்கைகளை அளித்திருந்த நிலையில், அதில் என்னென்ன இடம்பெற்றிருந்தன என்பதை பார்க்கலாம்.
முதல்வர் ஸ்டாலின் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளதால், அமைச்சர் தங்கம் தென்னரசு வழியாக கோரிக்கை கடிதத்தை பிரதமரிடம் வழங்கினார். அதில், தமிழ்நட்டு மாணவர்களின் கல்விக்கான நிதி விவகாரத்தில் 2024-25 ஆண்டுக்கான நிலுவையில் உள்ள 2,151.59 கோடியையும், 2025-26 ஆண்டுக்கான முதல் தவணை நிதியையும் விரைவாக வழங்கிட வேண்டுமென தெரிவிக்கப்பட்டுள்ளது.
திண்டிவனம்-செஞ்சி-திருவண்ணாமலை, ஈரோடு-பழனி, அருப்புக்கோட்டை வழியாக மதுரை- தூத்துக்குடி, மாமல்லபுரம் வழியாக சென்னை-கடலூர் ரயில் பாதை திட்டங்கள் உள்ளிட்ட ரயில்வே துறை சார்ந்த திட்டங்களை செயல்படுத்த வேண்டுமென கூறப்பட்டுள்ளது. மேலும், இலங்கை அரசால் தமிழக மீனவர்கள் எதிர்கொள்ளும் கைது, படகு பறிமுதல் போன்ற பிரச்சினைகளுக்கு நிரந்தர தீர்வு காணவும் வலியுறுத்தப்பட்டுள்ளது.
சேலம் உருக்காலை மிகை நிலங்களை பாதுகாப்பு தொழிற்பூங்காவிற்கு வழங்கிடவும் முதல்வர் ஸ்டாலின் கேட்டுக் கொண்டுள்ளார்.
இதே போன்று, பிரதமர் மோடியைச் சந்தித்த எதிர்க்கட்சித் தலைவர் எடப்பாடி பழனிசாமியும் மூன்று முக்கிய கோரிக்கைகளை முன்வைத்தார். அதில், விவசாயிகளுக்கு சிபில் ஸ்கோர் நடைமுறையில் இருந்து விலக்கு அளிக்க வேண்டும், சென்னை, கோவை, ஓசூர், சேலம், திருச்சியை இணைக்கும் வகையில் தமிழகத்தில் ராணுவ தளவாட வழித்தடத்தை அமைக்க வேண்டும், கோதாவரி-காவிரி இணைப்பு திட்டத்தை செயல்படுத்த வேண்டுமென பழனிசாமி வலியுறுத்தியுள்ளார்.