தமிழ்நாடு

கார் மீது பஸ் மோதிய விபத்தில் 3 கல்லூரி மாணவர்கள் உயிரிழப்பு - கோவில்பட்டியில் சோகம்

webteam

கோவில்பட்டி அருகே தனியார் பேருந்தும் காரும் மோதிய விபத்தில் மூன்று கல்லூரி மாணவர்கள் பரிதாபமாக உயரிழந்த சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது.

தூத்துக்குடி மாவட்டம் கோவில்பட்டி கிருஷ்ணா நகரைச் சேர்ந்த லட்சுமண பெருமாள் என்பவரின் மகன் கீர்த்திக் (23). இவர் விருதுநகர் மாவட்டத்தில் உள்ள தனியார் பொறியியல் கல்லூரியில் 3ஆம் ஆண்டு படித்து வந்தார். நேற்று மாலை கல்லூரி முடிந்த பின்னர், தனது கல்லூரி நண்பர்களான் செந்தில்குமார் (24), அஜய் (23), அருண்குமார் (21), விக்னேஷ் (23) ஆகியோருடன் கோவில்பட்டிக்கு காரில் வந்து கொண்டிருந்தார்.

அப்போது இளையரசனேந்தல் சாலையில் உள்ள பாலத்தில் வந்தபோது எதிரே வந்த தனியார் பேருந்து கார் மீது மோதி விபத்துக்குள்ளானது. இதில், கீர்த்திக், செந்தில் குமார், அஜய் ஆகியோர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தனர். அருண்குமார், விக்னேஷ் ஆகியோர் படுகாயம் அடைந்தனர். தகவல் அறிந்து கோவில்பட்டி டிஎஸ்பி வெங்கடேஷ், மேற்கு காவல் நிலைய ஆய்வாளர் கிங்ஸ்லி தேவானந்த், உதவி ஆய்வாளர் அரிக் கண்ணன் மற்றும் போலீஸார் சம்பவ இடத்துக்கு விரைந்து வந்தனர்.

இதையடுத்து தீயணைப்புத் துறையினர் உதவியுடன் இடிபாடுகளின் சிக்கி இருந்த 3 பேரின் உடல்களை மீட்டு உடற்கூறு ஆய்வுக்காக கோவில்பட்டி தலைமை அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். படுகாயமடைந்த 2 பேரை மீட்டு சிகிச்சைக்காக கோவில்பட்டி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். அவர்களுக்கு அங்கு முதலுதவி சிகிச்சை அளிக்கப்பட்டு மேல் சிகிச்சைக்காக தூத்துக்குடி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டனர்.

அதேபோல் தனியார் பேருந்தில் வந்து காயமடைந்த தனியார் கல்லூரி தோட்ட தொழிலாளி பிள்ளையார் நத்தத்தைச் சேர்ந்த மாடசாமி (62) என்பவருக்கு அரசு மருத்துவமனையில் சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. இந்த விபத்து தொடர்பாக வழக்குப்பதிவு செய்த கோவில்பட்டி மேற்கு காவல்நிலைய போலீஸார் விசாரணை நடத்தி வருகின்றனர். இச்சம்பவம் கோவில்பட்டியில் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.