கோவையில் அமைச்சர் வேலுமணி குறித்து ஆதாரமில்லாமல் பேசியதாக திமுக தலைவர் ஸ்டாலின் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது.
நேற்றைய தினம் திமுகவின் பொள்ளாச்சி வேட்பாளர் சண்முக சுந்தரத்தை ஆதரித்து மு.க.ஸ்டாலின் பரப்புரை மேற்கொண்டார். கோவை தொண்டாமுத்தூர் அருகே அவர் வாகனத்தில் பிரச்சாரம் செய்த போது, அமைச்சர் எஸ்.பி வேலுமணி மற்றும் முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி மீது பல்வேறு குற்றச்சாட்டுகளை முன்வைத்திருந்தார். அத்துடன் பொள்ளாச்சி பெண்கள் பாலியல் வன்கொடுமை வழக்கில் கைது செய்யப்பட்ட பார் நாகராஜுக்கும், அமைச்சர் வேலுமணிக்கு பல்வேறு தொடர்புகள் இருப்பதாகவும், குற்றவாளிகளை அவர் தப்பிக்க வைக்க முயலுவதாகவும் ஸ்டாலின் பேசியிருந்தார். மேலும் உள்ளாட்சி துறையில் பல மோசடிகளை வேலுமணி செய்துள்ளதாகவும், உள்ளாட்சி தேர்தலை நடத்த அரசு தயாராக இல்லை எனவும் குற்றம்சாட்டியிருந்தார்.
இவ்வாறு ஸ்டாலின் பேசியது உண்மைக்கு புறம்பானவை எனவும், தேர்தல் நேரத்தில் இப்படி பேசுவது விதிமுறை மீறல் எனவும் அதிமுக வழக்கறிஞர் ராமச்சந்திரன் தொண்டாம்புத்தூர் காவல்நிலையத்தில் புகார் அளித்துள்ளார். அதில் பொள்ளாச்சி சம்பவம் தொடர்பாக இனி ஸ்டாலின் பரப்புரையில் பேசக்கூடாது என தெரிவித்துள்ளார். அதன் அடிப்படையில் காவல்துறையினர் ஸ்டாலின் மீது 3 பிரிவுகளின் கீழ் வழக்குப்பதிவு செய்துள்ளனர். 153 ஏ கலங்கம் செய்வதற்கு தூண்டுவது, 504 பொதுமக்களின் அமைதியை சீர்குலைப்பது, 125 ஏ அமைதியை சீர்குலைப்பது ஆகிய பிரிவுகளில் வழக்குப்பதியப்பட்டுள்ளது.