கன்னியாகுமரி மாவட்டம் குளச்சல் அருகே கிடைக்காத புதையலில் பங்கு கேட்டு தொழிலதிபரை கடத்திய புகாரில் 3 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். பெண் உதவி ஆய்வாளர் ஒருவர் கடத்தலுக்கு திட்டம் தீட்டிக் கொடுத்த அதிர்ச்சி தகவலும் விசாரணையில் தெரியவந்துள்ளது.
தக்காளிவிளை, கன்னியாகுமரி கன்னியாகுமரி மாவட்டம் குளச்சல் அருகேயுள்ள தக்காளிவிளையைச் சேர்ந்தவர் தொழிலதிபர் ஜெர்லின். ஜே.சி.பி. ஆபரேட்டரான ஜெர்லின் தனது சொத்துகளை அடகு வைத்து கடன் பெற்று சொந்தமாக தொழில் தொடங்கியுள்ளார். அதன் மூலம் 3 பொக்லைன் இயந்திரங்கள் மற்றும் 2 கார்கள் ஆகியவற்றை வாங்கி அவற்றை வாடகைக்கு விட்டு வந்துள்ளார்.
இந்த நிலையில் ஜெர்லினின் நண்பர்கள் ஜெயராஜன், ஸ்டாலின் ஆகியோர் அவரிடம் அடிக்கடி பணம் கேட்டு மிரட்டி வந்ததாக தெரிகிறது. கடந்த 7ஆம் தேதி ஜெயராஜன் மற்றும் சிலர் ஜெர்லினை கடத்திச் சென்றதாக கூறப்படுகிறது. புதையல் கிடைத்ததால்தான் ஜெர்லின் வசதியுடன் இருப்பதாகக்கூறிய அவர்கள் தங்களுக்கும் அதில் பங்கு தர வேண்டும் என அவரை மிரட்டியுள்ளனர்.
50 லட்சம் ரூபாய் தரும்படி அவரை அடித்து உதைத்த கடத்தல்காரர்கள் பத்திரங்களில் கையெழுத்து வாங்கியதுடன் அவரது இரண்டு கார்களையும் பறித்துக் கொண்டு ஜெர்லினை விடுவித்தனர். மேலும் ஜெர்லின் வீட்டுக்கு காவல்துறையைச் சேர்ந்த இருவர் வந்துள்ளனர். கடத்தல்காரர்கள் கேட்கும் பணத்தை கொடுத்துவிடும்படி ஜெர்லினை அவர்கள் மிரட்டியதாக தெரிகிறது.
இதுகுறித்து ஜெர்லின் அளித்த புகாரின் பேரில் 7 பேர் மீது வழக்குப்பதிவு செய்த காவல்துறையினர் சுரேஷ்குமார், ஜெயன்ராபி, கிருஷ்ணகுமார் ஆகியோரை கைது செய்தனர். தனக்கு பழக்கமான பெண் ஆய்வாளர் தான் கடத்தலுக்கு திட்டம் தீட்டி கொடுத்ததாக சுரேஷ்குமார் காவல்துறையினரிடம் தெரிவித்துள்ளார். மேலும் கடத்தலுக்கு உதவியாக சிறப்பு உதவி ஆய்வாளர் மற்றும் தலைமைக் காவலரை தங்களுடன் பெண் எஸ்.ஐ. அனுப்பி வைத்ததாகவும் சுரேஷ்குமார் கூறியுள்ளார்.
இதுதொடர்பாக பெண் ஆய்வாளர், சிறப்பு உதவி ஆய்வாளர் மற்றும் தலைமைக் காவலரிடம் ஏ.எஸ்.பி. கார்த்திக் விசாரணை நடத்தி வருகிறார்.