தமிழ்நாடு

சென்னை பெருங்குடி குப்பைக் கிடங்கில் 2வது நாளாக எரியும் தீ - மக்கள் கடும் அவதி!

Veeramani

சென்னை மாநகராட்சியின் பெருங்குடி குப்பைக் கிடங்கில் தீயை அணைக்க இரண்டாம் நாளாக போராடி வருகின்றனர்.

சென்னை மாநகராட்சியின் பெருங்குடி குப்பைக்கிடங்கில் கடந்த 27ஆம் மாலை 3 மணியளவில் தீ விபத்து ஏற்பட்டது. நுழைவுவாயில் அருகே பற்றிய தீ மளமளவென அருகில் உள்ள குப்பை மேடுகளுக்கும் தீ பரவியது. இதனால், கிடங்கில் ஒரு பகுதி முழுவதும் பற்றி எரிந்தது. இரண்டாவது நாளாக இன்றும் தீயணைப்பு பணிகள் தொடரும் நிலையில், சென்னை மாநகராட்சி துணை மேயர் மகேஸ்குமார் , சோழிங்கநல்லூர் எம்எல்ஏ அரவிந்த் ரமேஷ் ஆகியோர் நேரில் பார்வையிட்டு ஆய்வு செய்தனர்.



பின்னர் செய்தியாளர்களுக்கு பேட்டியளித்த மகேஷ்குமார், நேற்று மாலை 3 மணியிலிருந்து தீயணைப்பு பணியில் தொடர்ந்து ஈடுபட்டு வருகின்றனர் என்றும், எட்டு தீயணைப்பு வாகனங்கள் பணியில் ஈடுபட்டு, தற்போது தீ மேற்கொண்டு அருகில் உள்ள சதுப்புநிலத்திற்கு பரவாமல் கட்டுக்குள் கொண்டு வரப்பட்டுள்ளதாக தெரிவித்தார். மேலும், கோடை வெயில் காரணமாக தீ ஏற்பட்டிருக்க வாய்ப்பிருப்பதாக தெரிவித்த மகேஸ்குமார், பெருங்குடி கிடங்கில் நிரந்தர தீயணைப்பு நிலையம் அமைக்க துறை அமைச்சருக்கு வேண்டுகோள் விடுத்துள்ளதாக தெரிவித்தார்.  

தீயினால் கருகி மலைப்போல் தேங்கி கிடக்கும் கழிவுகளில் இருந்து தொடர்ந்து புகை வெளியேறுவதால், அந்த பகுதி முழுவதும் புகைமூட்டமாக காட்சியளிக்கின்றன.