தமிழ்நாடு

சத்துணவு சாப்பிட்ட மாணவிகளுக்கு வாந்தி, மயக்கம் - 28 பேர் மருத்துவமனையில் அனுமதி

webteam

கவிமணி பெண்கள் அரசு மேல்நிலைப்பள்ளியில் சத்துணவு திட்டத்தில் மதிய உணவு சாப்பிட்ட மாணவிகள் 26 பேர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். மாணவிகள் அனைவருக்கும் வாந்தி, மயக்கம் ஏற்பட்ட நிலையில் மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டனர். 

கன்னியாகுமரி மாவட்டம் நாகர்கோவிலில் கவிமணி தேசிக விநாயகம் பிள்ளை நினைவு அரசு மகளிர் மேல்நிலைப்பள்ளி செயல்பட்டு வருகிறது. இங்கு 1300க்கு மேற்பட்ட மாணவிகள் பயின்று வருகின்றனர். இன்று மதிய உணவு பள்ளியில் வழங்கப்பட்டுள்ளது. அதில் சோறு, பருப்பு குழம்பு மற்றும் முட்டை பரிமாறப்பட்டதாகக் கூறப்படுகிறது. இந்நிலையில் 6,7 மற்றும் 8ஆம் வகுப்பைச் சேர்ந்த மாணவிகள் சிலர் மயக்கம் அடைந்து விழுந்துள்ளனர்.

இதனால் பரபரப்பான நிலையில் இத்தகவல் மாநகராட்சி நிர்வாகத்திற்கும் சுகாதாரத்துறைக்கும் தெரிவிக்கப்பட்டது. தொடர்ந்து ஆம்புலன்ஸ் உதவியுடன் ஆசாரிப்பள்ளம் அரசு மருத்துவ கல்லூரி மருத்துவமனைக்கு 26 மாணவிகள் சிகிட்சைக்காக அனுப்பி வைக்கப்பட்டனர். மீதமுள்ள மாணவிகளுக்கு பள்ளி வளாகத்தில் சுகாதாரத்துறையினர் பரிசோதனை மேற்கொண்டு வருகின்றனர். அசௌகரியமாக காணப்பட்ட மாணவிகளுக்கு முதலுதவி செய்யப்பட்டு வருகிறது. தொடர்ந்து பள்ளியில் மாணவிகள் அவர்களது பெற்றோர்களுக்கு தகவல் தெரிவிக்கப்பட்டு வீடுகளுக்கு அனுப்பி வைக்கப்பட்டனர்.

மருத்துவமனையில் உள்ள மாணவிகளை மாவட்ட ஆட்சியர் அரவிந்த், மாநகராட்சி மேயர் மகேஷ் , அமைச்சர் மனோ தங்கராஜ் உள்ளட்டோர் நேரில் சந்தித்தனர். சுமார் 180 மாணவிகளுக்கு உணவு சமைக்கப்பட்ட நிலையில் 100க்கும் மேற்பட்ட மாணவிகள் இந்த சத்துணவை சாப்பிட்டுள்ளனர். அவர்களுக்கும் முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக மருத்துவ வசதிகள் செய்து கொடுக்கப்பட்டுள்ளது.