கடலுக்கு சென்ற மீனவர்களில் 2,604 மீனவர்கள் மீட்கப்பட்டுள்ளதாக முதல்வர் பழனிசாமி தெரிவித்துள்ளார்.
இதுகுறித்து முதலமைச்சர் வெளியிட்டுள்ள அறிக்கையில், ஒகி புயலின் காரணமாக கன்னியாகுமரி மாவட்டத்தில் காணாமல் போன 294 மீனவர்களில் 220 மீனவர்கள் பத்திரமாக மீட்கப்பட்டுள்ளதாக தெரிவித்துள்ளார். மற்ற இடங்களில் இருந்து சென்ற 2,570 பேரில் 2,384 மீனவர்கள் மீட்கப்பட்டுள்ளதாக முதல்வர் பழனிசாமி கூறியுள்ளார். மீட்கப்பட்ட மீனவர்களின் நிலை குறித்து குடும்பத்தினருக்கு தகவல்கள் கொடுக்கப்பட்டுள்ளதாகவும் அவர் கூறியுள்ளார்.
மீதம் இருக்கும் 260 மீனவர்களை மீட்கும் பணி தொடர்ந்து நடைபெற்று வருவதாகவும் முதல்வர் குறிப்பிட்டுள்ளார். குமரி மாவட்டத்தில் சேதங்களை கணக்கிட்டு, வரும் 11 ஆம் தேதிக்குள் அறிக்கை அளிக்க அதிகாரிகளுக்கு ஆணையிடப்பட்டுள்ளதாக கூறியுள்ள முதல்வர் பழனிசாமி, படகுகளின் சேதங்களை கணக்கிடும் பணி முடிந்ததும் உரிய இழப்பீடு வழங்கப்படும் எனவும் தெரிவித்துள்ளார்.