தமிழ்நாடு

திமுக தலைவர் ஸ்டாலின் உட்பட 200பேர் மீது வழக்குப்பதிவு

kaleelrahman

புதுசத்திரம் பகுதியில் தடையை மீறி கிராமசபை கூட்டம் நடத்தியதாக கொரட்டூர் கிராம நிர்வாக அலுவலர் அளித்த புகாரில், திமுக தலைவர் ஸ்டாலின் மீது வெள்ளவேடு காவல்துறையினர் வழக்குப்பதிவு செய்துள்ளனர்.

திருவள்ளூர் மாவட்டம் பூந்தமல்லியை அடுத்த புதுசத்திரம் பகுதியில் திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் தலைமையில் கிராமசபை கூட்டம் நடைபெற்றது. இதில் 200-க்கும் மேற்பட்டோர் கலந்து கொண்டனர். கொரோனா தடை உத்தரவு அமலில் உள்ளதால் கிராம சபை கூட்டத்தை அரசு ரத்து செய்துள்ளது. 

இந்நிலையில், கூட்டம் கூடியதாக கொரட்டூர் கிராம நிர்வாக அலுவலர் அல்போன்சா, வெள்ளவேடு காவல் நிலையத்தில் புகார் அளித்திருந்தார். அதில் கொரோனா தடை உத்தரவை மீறி கொரட்டூர் ஊராட்சி மன்ற தலைவர் பாஸ்கர் ஏற்பாட்டில் நடத்தப்பட்ட கிராமசபை கூட்டத்தில் பங்கேற்ற திமுக தலைவர் மு.க. ஸ்டாலின், திருவள்ளூர் திமுக தெற்கு மாவட்ட செயலாளர் ஆவடி நாசர், பூந்தமல்லி எம்.எல்.ஏ கிருஷ்ணசாமி உள்ளிட்ட 200 பேர் மீது புகார் அளித்திருந்தார்.


அந்தப் புகாரின் பேரில் வெள்ளவேடு காவல் துறையினர், தடை உத்தரவை மீறுதல், அரசு உத்தரவை மீறுதல், கொரோனா பேரிடர் சட்டத்தை மீறுதல் (143 பிரிவு, 188 பிரிவு, 15 டி.எம்) ஆகிய 3 பிரிவுகளின் கீழ் 200 பேரின் மீதும் வழக்குப்பதிவு செய்துள்ளனர்.