தமிழ்நாடு

சென்னையில் 200 அரசு பேருந்துகள் இயங்கும் : மாநகர போக்குவரத்துக் கழகம்

webteam

சென்னையில் அத்தியாவசிய, அவசரப் பணிகளுக்காகவும் மற்றும் அரசு ஊழியர்களுக்காகவும் 200 பேருந்துகள் இயக்கப்படும் என மாநகர போக்குவரத்துக்கழகம் அறிவித்துள்ளது.

கொரோனா வைரஸால் நீட்டிக்கப்பட்டிருந்த பொதுமுடக்கம் நேற்றுமுடன் முடிவுக்கு வரவிருந்தது. இந்நிலையில் மே 31ஆம் தேதி வரை தமிழகத்தில் பொதுமுடக்கம் நீட்டிக்கப்படுவதாக தமிழக முதலமைச்சர் பழனிசாமி அறிவித்திருந்தார். அத்துடன் பல்வேறு தளர்வுகளை அவர் வெளியிட்டிருந்தார். குறிப்பாக, அரசு அலுவலகங்கள் 50% பணியாளர்களுடன் இயக்கப்படும் என தெரிவிக்கப்பட்டிருந்தது. அதற்கான பேருந்துகள் இயக்கப்படும் எனவும் கூறப்பட்டிருந்தது.

இந்நிலையில் சென்னையில் 200 பேருந்துகள் இயக்கப்படும் என மாநகர போக்குவரத்துக் கழக மேலாண் இயக்குநர் கணேசன் தெரிவித்துள்ளார். அத்தியாவசிய, அவசரப் பணிகள் மற்றும் 50% அரசு ஊழியர்களுக்காக இந்த பேருந்துகள் இயக்கப்படுவதாக அறிவிக்கப்பட்டுள்ளது. தேவை ஏற்பட்டால் கூடுதல் பேருந்துகளை இயக்கவும் ஏற்பாடு செய்யப்பட்டிருப்பதாக கூறப்பட்டுள்ளது.