தமிழ்நாடு

விளையாட்டாக வைக்கோலில் குழந்தைகள் பற்ற வைத்த நெருப்பு - பெண் குழந்தைக்கு நேர்ந்த சோகம்

Sinekadhara

கிருஷ்ணகிரி மாவட்டம் அஞ்செட்டி அருகே வைக்கோல் போரில் ஏற்பட்ட தீ விபத்தில் படுகாயமடைந்த 2 வயது பெண் குழந்தை சிகிச்சை பலனின்றி உயிரிழந்தது.

அஞ்செட்டி அருகே பையில்காடு என்ற கிராமத்தில் மாரிமுத்து - ஜோதி என்ற தம்பதியருக்கு மூன்று குழந்தைகள் உள்ளனர். ஒரு பெண் இரண்டு ஆண் குழந்தைகள் உள்ள நிலையில் நேற்று மாலை மூன்று குழந்தைகளும் வீட்டின் அருகே வைக்கோல் வைக்கப்பட்டிருந்த பகுதியில் விளையாடிக் கொண்டிருந்துள்ளனர். அப்போது அருகே இருந்த தீப்பெட்டியை எடுத்து விளையாட்டாக ஒரு குழந்தை பற்ற வைத்துள்ளது. அதில் வைக்கோல் பற்றி எரிந்ததில் பயந்துபோன இரண்டு குழந்தைகள் தப்பித்து ஓடி உள்ளனர்.

ஆனால் வைக்கோலுக்குள் இருந்த 2 வயது குழந்தை விஷாலினி, நெருப்பில் சிக்கியதில் பலத்த தீக்காயம் ஏற்பட்டு கிருஷ்ணகிரி அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக சேர்க்கப்பட்டது. ஆனால் சிகிச்சை பலனின்றி குழந்தை உயிரிழந்தது. இச்சம்பவம் தொடர்பாக அஞ்செட்டி போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.