ஆவினில் ஒரே பதிவெண்ணில் 2 வாகனங்கள்
ஆவினில் ஒரே பதிவெண்ணில் 2 வாகனங்கள்  pt desk
தமிழ்நாடு

வேலூர்: ஒரே பதிவெண்ணில் 2 வாகனங்கள் - பால் திருட்டில் ஈடுபட்டனரா? அதிகாரிகள் விசாரணை

webteam

வேலூர் சத்துவாச்சாரியில் ஆவின் பால் பண்ணை செயல்பட்டு வருகிறது. இங்கு வேலூர், திருப்பத்தூர், ராணிப்பேட்டை ஆகிய மூன்று மாவட்ட விவசாயிகளிடம் இருந்து நாள் ஒன்றுக்கு சுமார் 1,10,000 லிட்டர் பால் பெறப்படுகிறது. அந்த பால், பாக்கெட்டுகளாக தயார் செய்யப்பட்டு சுமார் 600 முகவர்களுக்கு 20 ஒப்பந்த வாகனங்கள் மூலம் அனுப்பப்பப்படுகிறது.

ஆவினில் ஒரே பதிவெண்ணில் 2 வாகனங்கள் (இடம்: வேலூர்)

இந்த பண்ணையில் கடந்த 1 ஆம் தேதி முதல் ஒப்பந்ததாரர் ஒருவர் நியாமிக்கப்பட்டார். அவர் வந்தபின் ‘கடந்த சில நாட்களாக உற்பத்தி செய்யப்படும் பால் பாக்கெட்டுக்கும், விற்பனை செய்யப்படும் பாலுக்கும் வித்தியாசம் இருப்பது’ அதிகாரிகளுக்கு தெரியவந்தது. ஆவின் பால் பண்ணையில் அடிக்கடி பால் திருட்டு சம்பவங்கள் நடப்பதாக சர்ச்சைகள் ஏற்படுவதுண்டு என்பதால், அதிகாரிகள் தீவிர கண்காணிப்பு பணியில் ஈடுபட்டனர்.

இந்நிலையில், நேற்று மதியம் பால் பாக்கெட்டுகளை ஏற்றிச் செல்ல பல பால் வேன்கள் பாலகத்தின் உள்ளே வந்துள்ளன. இதையடுத்து ஆவின் காவலாளி வாகன எண்களை சரி பார்த்துள்ளார். அப்போது ஒரே வாகன எண்ணில் இரண்டு வண்டிகள் உள்ளே சென்றது தெரியவந்தது. இது குறித்து அவர் அதிகாரிகளுக்கு தகவல் தெரிவித்துள்ளார். உடனடியாக அதிகாரிகள் விரைந்து சென்று பார்த்துள்ளனர்.

ஆவினில் ஒரே பதிவெண்ணில் 2 வாகனங்கள் (இடம்: வேலூர்)

அப்போது T N 23 AC 1352 என்ற ஒரே எண்ணில் இரண்டு வேன்கள் பல ஆயிரம் மதிப்புள்ள பாக்கெட் பாலை ஏற்றிக் கொண்டு புறப்பட தயார் நிலையில் இருந்தது. இதனை பார்த்து அதிர்ச்சியடைந்த அதிகாரிகள் இரண்டு லாரிகள் மற்றும் பால் பாக்கெட்களை பறிமுதல் செய்தனர்.

இந்த நூதன பால் திருட்டு சம்பவம் குறித்து ஆவின் அதிகாரிகள் கூறும் போது “ஒரே வாகன எண்ணில் பால் ஏற்றிச் செல்ல இருந்த 2 லாரிகள் பறிமுதல் செய்யப்பட்டு உள்ளன. இது குறித்து வட்டார போக்குவரத்து அதிகாரியிடம் புகார் செய்துள்ளோம். நாளை (புதன்கிழமை) இரண்டு லாரி உரிமையாளர்களிடமும் உள்ள வாகனத்தின் ஆவணங்களை எடுத்து வரச் சொல்லியுள்ளோம். விசாரணையின் முடிவில் இந்த சம்பவம் பால் திருட்டுக்காக நடந்ததா அல்லது வேறு காரணமா என்ற முழுமையான உண்மை நிலவரம் தெரியவரும்” என தெரிவித்தனர்.