தமிழ்நாடு

அதிமுக முன்னாள் அமைச்சர் மணிகண்டனை பிடிக்க 2 தனிப்படைகள் அமைத்து தேடுதல் வேட்டை

JustinDurai
துணை நடிகை அளித்த புகார் தொடர்பாக அதிமுக முன்னாள் அமைச்சர் மணிகண்டனை கைது செய்ய 2 தனிப்படைகள் அமைக்கப்பட்டுள்ளன.
அதிமுக முன்னாள் அமைச்சர் மணிகண்டன் மீது திரைப்பட துணை நடிகை புகார் ஒன்றை கொடுத்தார். இந்த புகார் மனு மீது அடையாறு அனைத்து மகளிர் போலீசார் விசாரணை நடத்தினார்கள். மணிகண்டன் மீது கொலை மிரட்டல், திருமணம் செய்வதாக ஏமாற்றுதல் போன்ற 6 சட்டப்பிரிவுகளின் கீழ் அடையாறு அனைத்து மகளிர் போலீசார் வழக்குப்பதிவு செய்தனர். இதனையடுத்து, முன்னாள் அமைச்சர் மணிகண்டன் பாலியல் வழக்கில் முன்ஜாமீன் கோரி உயர் நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்து இருந்தார்.
ஆனால் மணிகண்டன் மீதான குற்றச்சாட்டில் முகாந்திரம் உள்ளதாக கூறி, அவரது முன்ஜாமீன் மனுவை நீதிபதி தள்ளுபடி செய்து உத்தரவிட்டார். இதையடுத்து முன்ஜாமீன் மனு தள்ளுபடி ஆனதால் மணிகண்டனை பிடிக்க போலீசார் தீவிரம் காட்டி வருகின்றனர். மேலும் மணிகண்டனை கைது செய்ய 2 தனிப்படைகள் அமைக்கப்பட்டுள்ளன. மதுரையில் பதுங்கியிருக்கலாம் என்ற தகவலால் மணிகண்டனை பிடிப்பதற்காக தனிப்படை போலீசார், மதுரை சென்று அவரை தேடி வருகின்றனர்.