தமிழ்நாடு

2 நாள் நோட்டமிட்டு தாக்குதல்: முதிய தம்பதியிடம் கொள்ளையடிக்க முயன்ற வழக்கில் 2 பேர் கைது!

webteam

கடையம் அருகே முதிய தம்பதியைத் தாக்கி கொள்ளை முயற்சியில் ஈடுபட்ட சம்பவத்தில் இரண்டு பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். 

நெல்லை மாவட்டம் கடையம் அருகே உள்ள கல்யாணிபுரத்தில் முகமூடி அணிந்து வந்த இரண்டு பேர், வீட்டின் வாசலில் அமர்ந்திருந்த முதியவர் சண்முகவேல் என்பவரை அரிவாளால் தாக்கிவிட்டு கொள்ளையடிக்க முயன்றனர். அப்போது, அவரும் அவரது மனைவி செந்தாமரையும் இணைந்து கொள்ளையர்களை துணிச்சலுடன் தாக்கினர். இதில் நிலைகுலைந் து போன கொள்ளையர்கள், அங்கிருந்து தப்பி ஓடினர். 

இச்சம்பவம் குறித்து சிசிடிவி காட்சிகளைக் கொண்டு காவல்துறையினர் விசாரணை நடத்தி வந்தனர். கொள்ளை சம்பவம் நடந்த இடத்தை மாவட்ட காவல் கண்காணிப்பாளர் அருண் சக்திகுமார் நேரில் சென்று ஆய்வு மேற்கொண்டார். அத்துடன், கொள்ளையர்களை விரட்டியடித்த, அவ்விருவரின் வீரதீரச் செயலுக்கு மாவட்ட காவல் கண்காணிப்பாளர் பாராட்டு தெரிவித்தார். அந்த தம்பதிக்கு வீரதீர செயலுக்கான அரசு விருது வழங்கப்பட்டது.

இந்நிலையில் இந்தத் தாக்குதலில் ஈடுபட்ட பாலமுருகன், பெருமாள் ஆகிய இரண்டு பேரை போலீசார் கைது செய்துள் ளனர். பாலமுருகன் மீது 38 வழக்குகளும் பெருமாள் மீது 8 வழக்குகளும் நிலுவையில் உள்ளதாக நெல்லை எஸ்பி அருண் சக்திகுமார் செய்தியாளர்களிடம் தெரிவித்தார்.

எப்படி நுழைந்து சென்று கொள்ளையடிக்கலாம் என, முதல் 2 நாட்கள் நோட்டமிட்டு, பிறகு இந்தக் கொள்ளைச் சம்பவத்தில் ஈடுபட்டுள்ளனர். கொள்ளையர்களிடம் இருந்த அரிவாள், ஏர்கன் ஆகியவை பறிமுதல் செய்யப்பட்டுள்ளன என்று அவர் மேலும் தெரிவித்தார்.