புதுச்சேரி சோலை நகரில் கடந்த ஆண்டு 9 வயது சிறுமி அதே பகுதியை சேர்ந்த நபர்களால் பாலியல் வன்கொடுமை செய்யப்பட்டு கொல்லப்பட்ட நிலையில், தற்போது அதே பகுதியில் 14 வயதுடைய இரண்டு சிறுமிகளை 6 வாலிபர்கள் கூட்டு பாலியல் வன்கொடுமை செய்துள்ளதாக கூறப்படும் சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. இதில் 2 வாலிபர்களை போக்சோவில் கைது செய்த காவல்துறையினர், மேலும் 4 பேரிடம் விசாரணை நடத்தி வருகின்றனர்.
புதுச்சேரி முத்தியால்பேட்டை பகுதியை சேர்ந்த 14 வயது மாணவிகள், 8 ம் வகுப்பு வரை படித்துவிட்டு படிப்பை பாதியிலேயே நிறுத்திவிட்டனர்.
இந்நிலையில் கடந்த 2-ம் தேதி இரண்டு சிறுமிகளும் வீட்டின் அருகே விளையாடி கொண்டிருந்துள்ளனர். அப்போது திடீரென இரண்டு பேரும் காணாமல் போனதைக் கண்டு, பெற்றோர் அதிர்ச்சி அடைந்தனர். உடனே சிறுமியின் பெற்றோர் முத்தியால்பேட்டை காவல் நிலையத்தில் புகார் அளித்த நிலையில், போலீசார் வழக்குபதிந்து, இருவரையும் கண்டுபிடித்தனர்.
தொடர்ந்து 2 சிறுமிகளிடமும் போலீசார் விசாரணை நடத்தியதில் பல்வேறு அதிர்ச்சியான தகவல் வெளியானது. அதில் வைத்திக்குப்பத்தை சேர்ந்த புஷ்பராஜ், மணி ஆகியோர் 2 சிறுமிகளை காதலிப்பதாக கூறி கடற்கரை உள்ளிட்ட பல்வேறு இடங்களுக்கு அழைத்து சென்று உல்லாசமாக இருந்துள்ளனர்.
மேலும் அந்த 2 வாலிபர்கள், அவர்களின் நண்பர்களை அழைத்து கூட்டு பாலியல் வன்கொடுமை செய்து இருப்பது தெரியவந்தது. இதையடுத்து போலீசார், இவ்வழக்கை போக்சோ வழக்காகபதிந்து புஷ்பராஜ், மணி ஆகியோரை முத்தியால்பேட்டை கிரைம் போலீசார் கைது செய்து, நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி காலாபட்டு சிறையில் அடைத்தனர்.
தொடர்ந்து இவ்வழக்கில் தொடர்புடைய மேலும் 4 பேரிடம் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர். மேலும் இந்த 2 சிறுமிகளை 10க்கும் மேற்பட்டோர் பாலியல் வன்கொடுமை செய்து இருப்பதாகவும், அதில் 10 பேரை சிறுமிகள் அடையாளம் காட்டியுள்ளதாக போலீஸ் விசாரணையில் தெரியவந்தது. இச்சம்பவம் புதுச்சேரி முழுவதும் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.