தமிழ்நாடு

கரும்புத் தோட்டத்தில் 2 சிறுத்தை குட்டிகள் : பத்திரமாக மீட்ட வனத்துறை

webteam

ஈரோடு மாவட்டம் தாளவாடி அருகே கரும்புத்தோட்டத்தில் இருந்த இரண்டு சிறுத்தை குட்டிகள் பத்திரமாக மீட்கப்பட்டன.

ஈரோடு மாவட்டம் தாளவாடி அருகேயுள்ள தொட்டமுதிகரை என்ற கிராமத்தில் தங்கராஜ் என்பவரின் கரும்புத்தோட்டம் உள்ளது. இங்கு கடந்த 5 நாட்களாக கரும்பு வெட்டும் பணி நடைபெற்று வருகிறது. இந்நிலையில் பணி நேரத்தின்போது விலங்குகளின் சத்தம் கேட்டதால், எங்கிருந்து சத்தம் வருகிறது எனத் தொழிலாளர்கள் தேடினர்.

அப்போது கரும்பு சோகைகளிடையே 2 சிறுத்தை குட்டிகள் இருப்பது தெரியவந்தது. இதையடுத்து ஜீரஹள்ளி வனத்துறையினருக்கு தகவல் அளிக்கப்பட்டது. அவர்கள் சம்பவ இடத்திற்கு வந்து சிறுத்தை குட்டிகளை பத்திரமாக மீட்டுச்சென்றனர். வனப்பகுதியில் இருந்து வந்த சிறுத்தை, கரும்புத்தோட்டத்தில் குட்டிகளை ஈன்றிருக்கக்கூடும் என்றும், மீட்கப்பட்ட குட்டிகள், பிறந்து ‌20 நாட்கள் ஆகியிருக்கக்கூடும் என்றும் வனத்துறையினர் தெரிவித்தனர்.