சென்னை பம்மல் விநாயகர் கோவில் தெருவைச் சேர்ந்தவர் 24 வயதான கோகுல். கேரள மாநிலத்தைச் சேர்ந்தவர் 24 வயதான விஷ்ணு. இருவரும் பெருங்குடியில் உள்ள தனியார் மென்பொருள் நிறுவனத்தில் பணியாற்றி வருகின்றனர்.வார இறுதி நாளை கொண்டாட நண்பர்களுடன் பள்ளிக்கரணை ராஜலட்சுமி நகர் ஆறாவது தெருவில் வசித்து வரும் அஜேஷ் என்பவர் வீட்டிற்கு கோகுல், விஷ்ணு, உள்ளிட்ட எட்டு நண்பர்களுடன் சென்று மது அருந்தியுள்ளனர்.
மேலும், குடிப்பதற்கு மது இல்லாததால் விஷ்னுவும் கோகுலும் மது வாங்க KTM இருசக்கர வாகனத்தில் நள்ளிரவில் 200 அடி சாலைக்குச் சென்றுள்ளனர் . அங்குள்ள தனியாருக்கு சொந்தமான பாரில் சட்ட விரோதமாக விற்பனை செய்த வந்த மதுபாட்டில்களை வாங்கிக் கொண்டு வேளச்சேரி மேடவாக்கம் பிரதான சாலை பள்ளிக்கரணை குளம் அருகே அதிவேகமாக இரு சக்கர வாகனத்தை இயக்கி வந்து கொண்டிருக்கும்போது சென்டர் மீடியனில் மோதி பின்னர் மின் கம்பத்தில் மோதி எதிர் திசையில் உள்ள சாலையில் தூக்கி வீசப்பட்டு கோகுல் தலை துண்டாகி சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தார். விஷ்ணு நெஞ்சு பகுதியில் பலத்த காயங்களுடன் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிர் இழந்தார்.
சம்பவம் குறித்து பள்ளிக்கரணை போக்குவரத்து புலனாய்வு பிரிவு போலீசருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டதையடுத்து சம்பவ இடத்திற்கு வந்த காவல் துறயினர் தலை துண்டாகி விபத்தில் உயிரிழந்த கோகுல் மற்றும் விஷ்ணுவின் உடலை மீட்டு உடற்கூறு ஆய்வுக்காக குரோம்பேட்டையில் உள்ள அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். விபத்து நடந்த இடத்திலிருந்து பள்ளிக்கரணை பிரதான சாலையில் சுமார் 200 மீட்டருக்கு ஏடிஎம் இரு சக்கர வாகனம் தனியாக சென்றுள்ளது. சம்பவம் குறித்து பள்ளிக்கரணை போக்குவரத்து புலனாய்வு பிரிவு காவல் துறையினர் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
மது போதையில் இருசக்கர வாகனத்தை அதிவேகத்தில் இயக்கிய போது ஏற்பட்ட விபத்தில் ஒருவர் தலை துண்டாகியும், மற்றொருவர் நெஞ்சு பகுதியில் பலத்த காயமே ஏற்பட்டு இருவர் பலியான சம்பவம் உறவினர்கள் மற்றும் நண்பர்கள் மத்தியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது. பள்ளிக்கரணை காவல் நிலைய எல்லைக்குட்பட்ட பகுதிகளில் உள்ள அனைத்து பார்களிலும் 24 மணி நேரமும் சட்டவிரோதமாக மது பாட்டில்களை விற்பனை செய்து வருவதால் இளைஞர்கள் அதிகமாக மது குடித்துவிட்டு இருசக்கர வாகனத்தை அதிவேகமாக இயக்கி வருவதால் இரவு நேரங்களில் இதுபோன்ற விபத்துக்கள் ஏற்படுவதற்கான காரணம் என தெரிய வருகிறது.