தமிழ்நாடு

பைக் மீது கார் மோதி விபத்து: மேம்பாலத்திலிருந்து கீழே விழுந்த, பாட்டி பேரன் உயிரிழப்பு

webteam

நாமக்கல் அருகே இருசக்கர வாகனத்தின் மீது கார் மோதிய விபத்தில் 50 அடி உயர மேம்பாலத்திலிருந்து கீழே விழுந்த பாட்டியும் பேரனும் உயிரிழந்துள்ளனர்.

நாமக்கல் மாவட்டம் செல்லப்பம்பட்டியை சேர்ந்தவர் ஜோதி என்கிற பழனியம்மாள் (50). இவர் தனது பேரன் கிருத்திக்ரோஷனை இருச்சக்கர வாகனத்தில் அழைத்து கொண்டு கரூர் மாவட்டம் தும்பிவாடியில் உள்ள தனது மகள் வீட்டிற்கு இன்று மதியம் சென்று கொண்டிருந்தார்.

நாமக்கல் அடுத்த வள்ளிபுனம் புறவழிச்சாலை மேம்பாலத்தில் சென்று கொண்டிருந்த போது தருமபுரியிலிருந்து கேரளா நோக்கி சென்ற கார் ஒன்று பழனியம்மாள் சென்ற இருச்சக்கர வாகனத்தின் பின்புறமாக மோதியது. இதில் பழனியம்மாளும் அவரது பேரனான கிருத்திக்ரோஷனும் 50 அடி உயர மேம்பாலத்திலிருந்து கீழே விழுந்ததில் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தனர்.

மேலும் அதே கார் மற்றொரு இருச்சக்கர வாகனத்தின் மீது மோதியதில் இருவர் படுகாயமடைந்தனர். படுகாயமடைந்த இருவரும் நாமக்கல் அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர். இச்சம்பவம் குறித்து தகவலறிந்து வந்த போலீசார் வழக்கு பதிவு செய்த காரை ஓட்டி வந்த ஜெகதீசனை கைது செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.