பவானி ஆற்றில் குளிக்கச் சென்ற இரண்டு கல்லூரி மாணவர்கள் தண்ணீரில் மூழ்கி பரிதாபமாக உயிரிழந்தனர்.
கோவை மாவட்டம் அன்னூர் பகுதியைச் சேர்ந்த தனியார் கல்லூரி மாணவர்களான குகன் மற்றும் கோகுல்ராஜ் இருவரும் சிறுமுகை பழத்தோட்டப் பகுதியில் ஓடும் பவானி ஆற்றில் குளிக்க சென்றுள்ளனர். அப்போது ஆற்று நீரின் வேகத்தில் ஆழமான பகுதிக்கு அடித்துச் செல்லப்பட்ட இருவரும் தண்ணீரில் மூழ்கி உயிரிழந்தனர். சம்பவ இடத்தில் பொதுமக்கள் யாரும் இல்லாததால் மாணவர்கள் இருவரும் நீண்ட நேரம் நீரில் போராடி உயிரிழந்துள்ளனர்.
அதன் பின்பு தகவல் அறிந்து சம்பவ இடத்திற்கு விரைந்த தீயணைப்புத்துறையினர் பரிசல்களில் சென்று ஆற்றில் மூழ்கிய மாணவர்களைத் தேடும் பணியில் ஈடுபட்டனர். சுமார் இரண்டு மணி நேர தேடலுக்கு பிறகு ஒரு மாணவரின் உடல் மீட்கப்பட்டது. இருப்பினும் மற்றொரு மாணவரின் உடலைத் தேடும் பணி தொடர்ந்து நடைபெற்று வருகிறது. இதனையடுத்து உயிரிழந்த மாணவர்களின் குடும்பத்திற்கு தகவல் அளிக்கப்பட்டுள்ளது.