விருதுநகரில் ஒரு மணமகனுக்கு இரண்டு மணமகள் என அச்சிடப்பட்ட திருமண அழைப்பிதழ், சமூகவலைதளத்தில் பரவியதால் பரபரப்பு ஏற்பட்டது.
விருதுநகர் மாவட்டம் அருப்புக்கோட்டை அருகே உள்ள வெள்ளயாபுரத்தை சேர்ந்தவர் ராமமூர்த்தி. இவர், சிறு வயதிலேயே தாய், தந்தையை இழந்ததால், சகோதரிகளால் வளர்க்கப்பட்டவர். கூலி வேலை பார்க்கும் இவருக்கு திருமணம் செய்ய உறவினர்கள் முடிவு செய்துள்ளனர். அதன்படி சகோதரியின் வீட்டிலேயே வளர்ந்த ராமமூர்த்திக்கு, ஒரு சகோதரியின் மகளை திருமணம் செய்ய ஏற்பாடுகள் நடைபெற்றன.
ஆனால் மற்றொரு சகோதரியின் மகள் உடல்நிலை சரியில்லாதவர் என்பதால் அந்த பெண்ணையும், ராமமூர்த்திக்கே திருமணம் செய்ய முடிவுசெய்யப்பட்டதாகக் கூறப்படுகிறது. இதையடுத்து ஒரு மணமகனுக்கு இரண்டு மணப்பெண்கள் பெயர் அச்சிடப்பட்ட திருமண அழைப்பிதழ் உறவினர்களுக்கு விநியோகிக்கப்பட்டது.
இந்த திருமண அழைப்பிதழ், சமூக வலைத்தளங்களில் வேகமாக பரவியது. இதுபற்றி மாவட்ட அதிகாரிகளுக்கும் புகார் தெரிவிக்கப்பட்டது. இதையடுத்து ராமமூர்த்தியின் சகோதரிகளிடம் அதிகாரிகள் விசாரணை மேற்கொண்டனர். அப்போது, தவறுதலாக இரண்டு மணப்பெண்களின் பெயர் அச்சிடப்பட்டுள்ளதாக விளக்கமளித்தனர்.